இம்ரான் கானின் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு, அடுத்த வாரம் நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. சபைக் கூட்டத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி ஆகியோர் இடையே பேச்சு நடைபெறும் என்று அறிவித்தது. இதனால், கடந்த 2 ஆண்டுகளுக்குப் பின் இரு நாடுகளுக்கு மீண்டும் பேச்சு தொடங்குவது பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் வீட்டில் இருந்து 3 போலீஸாரை கடத்திச் சென்ற ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகள் அவர்களைக் கொடூரமாக கொலை செய்தனர். இந்தச் சம்பவம் இரு நாடுகளுக்கு இடையே பேச்சு நடக்கும் சூழலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அதேசமயம், ஜம்மு காஷ்மீரில் கடந்த 2016-ம் ஆண்டு கொல்லப்பட்ட தீவிரவாதி புர்ஹான் வானியை பெருமைப்படுத்தி, இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் அரசு சார்பில் தபால் தலை இன்று வெளியிடப்பட்டது.
ஒரு புறம் தீவிரவாதிகள் இந்தியப் போலீஸாரை கடத்திக் கொல்கிறார்கள், மறுபுறம் தீவிரவாதிக்கு தபால்தலை வெளியிட்டு பாகிஸ்தான் பெருமைப்படுத்துகிறது என்று அறிந்த மத்தியஅரசு அடுத்த வாரம் இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மட்டத்தில் நடக்க இருந்த பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக இன்று அறிவித்தது.
இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ராவேஷ் குமார் நிருபர்களிடம் டெல்லியில் இன்று கூறியதாவது:
”தீவிரவாதி புர்ஹான் வானியை பெருமைப்படுத்தி தபால் தலை வெளியிட்டது,மறுபுறம் இந்தியப் போலீஸாரை தீவிரவாதிகள் கொலை செய்த நிகழ்வு போன்ற சம்பவங்கள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் உண்மையான முகத்தை வெளிக்காட்டிவிட்டது.
இந்த அமைதிப்பேச்சுத் திட்டத்துக்குப் பின்புலத்தில் இஸ்லாமாபாத்தின் கொடுமையான திட்டம் தெளிவாகிவிட்டது. இந்த மனநிலையில் இருக்கும் போது, இருதரப்பு உறவுகளையும் பாகிஸ்தான் மேம்படுத்தாது.
இரு நாடுகளுக்கு இடையே மீண்டும் அமைதிப்பேச்சு நடத்தப்படும் என்று நேற்று அறிவித்து இன்று போலீஸார் 3 பேர் கொல்லப்பட்ட சம்பவம் மிகவும் வேதனைப்படுத்துகிறது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் இருந்து கடிதமும், அதில் அமைதிப்பேச்சை மீண்டும் தொடங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார். தீவிரவாதம், காஷ்மீர் விவகாரத்தைப் பற்றி பேச சாதகமான மனநிலையில் இருக்கிறார்கள் என்று நம்பினோம். ஆனால், இப்போதுதான் பாகிஸ்தானின் உண்மையான மனநிலை என்ன, அவர்களின் திட்டம் என்ன என்று புரிந்துவிட்டது. புதிய பிரதமர் இம்ரான் கானின் முகம் என்ன என்பதை சில மாதங்களுக்குள் உலகிற்குத் தெரிந்துவிட்டது”.இவ்வாறு ராவேஷ் குமார் தெரிவித்தார்.
DINASUVADU