தூத்துக்குடியில் பயங்கரம்.! காதல் ஜோடி வீடு புகுந்து வெட்டி கொலை.!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த வசந்தகுமார் என்பவர் தூத்துக்குடி முருகேசன் நகரில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகன் மாரி செல்வம் (வயது 24) தனியார் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இவர் தூத்துக்குடி திருவிக நகரை சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவரது மூத்த மகளான கார்த்திகாவை காதலித்து வந்துள்ளார்.

இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நிலையில், இந்த விவகாரம் வீட்டுக்கு தெரிந்து உள்ளது. இதில் பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனை அடுத்து மாரி செல்வம் – கார்த்திகா காதல் ஜோடி கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி கோவில்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்துள்ளனர். அதன் பிறகு கோவில்பட்டியில் இருவரும் தங்கியுள்ளனர்.

நெல்லையில் மீண்டும் ஒரு சாதிய வன்கொடுமை சம்பவம் – பட்டியலின இளைஞர் மீது தாக்குதல்..!

திருமணம் முடித்து நேற்று தூத்துக்குடிக்கு வந்துள்ளனர். தூத்துக்குடியில் முருகேசன் நகரில் இருவரும் வசித்து வந்துள்ள நிலையில், நேற்று ஒரு மர்ம கும்பல் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் காதல் ஜோடியை வீடு புகுந்து வெட்டி உள்ளது.

ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே கார்த்திகா – மாரிச்செல்வம் இருவருமே உயிரிழந்து விட்டனர். சம்பவம் அறிந்து விரைந்து வந்த சிப்காட் காவல் துறையினர், மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் உயிரிழந்த மாரி செல்வம் – கார்த்திகாவின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த கொலை சம்பவம் குறித்து விசாரணை செய்து, தப்பி ஓடிய கொலையாளிகளை பிடிக்க மூன்று தனிப்படைகளை அமைத்துள்ளனர். கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கத்திற்கு மூன்று மகள்கள். இதில் மூத்த மகள் தான் கார்த்திகா.  மாரிச்செல்வம் பொருளாதாரத்தில் பின்தங்கியவர் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக கார்த்திகா வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. அதனால் இந்த கொலை சம்பவத்தில் கார்த்திகாவின் குடும்பத்தினர் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்து, அதன் பெயரில் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.