இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அணி உலகச் சாம்பியன் பட்டத்தை வென்றது..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அணி உலகச் சாம்பியன் பட்டத்தை வென்றது.

இங்கிலாந்தில் இந்தியாவிற்கும் நியூசிலாந்திற்கும் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 217 ரன்கள் எடுத்தனர்.

பின்னர், இறங்கிய நியூசிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 249 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதனால், நியூஸிலாந்து அணி 32 ரன்கள் முன்னிலையில் இருக்கும்போது இந்திய அணி நேற்று தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக சுப்மான் கில், ரோஹித் இருவரும் களமிறங்கினர். சிறப்பாக விளையாடி வந்த ரோஹித் 81 பந்தில் 30 ரன்கள் எடுத்தார்.

இறுதியாக இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 73 ஓவரில் அனைத்த விக்கெட்டை இழந்து 170 ரன்கள் எடுத்தனர். இதனால், நியூசிலாந்து அணிக்கு 139 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பின்னர் மத்தியில் களமிறங்கிய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் அதிகபட்சமாக  41 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.  நியூசிலாந்து அணியில் டிம் சவுதி 4 விக்கெட்டும், ட்ரெண்ட் போல்ட் 3 விக்கெட்டும் , கைல் ஜேமீசன் 2 விக்கெட்டும் பறித்தனர்.

139 ரன்கள் இலக்குடன் நியூஸிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக  டெவன் கான்வே, டாம் லாதம் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே டாம் லாதம் 9 ரன்னில் வெளியேறினார். பின்னர், கேன் வில்லியம்சன் களமிறங்கினார்.  நிதானமாக விளையாடி வந்த டெவன் கான்வே 19 ரன் எடுத்து வெளியேற இதைத்தொடர்ந்து,  ராஸ் டைலர், கேன் வில்லியம்சன் உடன் கூட்டணி அமைத்தார்.

ஒரு புறம் சிறப்பாக விளையாடிய கேன் வில்லியம்சன் அரைசதம் விளாசி 52* ரன்கள் எடுத்தார். மற்றோரு புறம் நிதானமாக விளையாடிய ராஸ் டைலர் 47* ரன்கள் எடுக்க இறுதியாக நியூஸிலாந்து அணி 45.5 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 140 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதல் முறையாக ஐசிசி நடத்திய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் முதல் அணியாக நியூசிலாந்து அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது. கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிக்கு 12 கோடி ரூபாய் பரிசுத் தொகையும், இரண்டாம் இடம் பிடித்த இந்திய அணிக்கு 6 கோடி பரிசு தொகை வழங்கப்பட்டுள்ளது.

 

author avatar
murugan