புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் – முதல்வர் அறிவிப்பு ..!

கர்நாடகாவில் டிஜே போன்ற எந்த சிறப்பு நிகழ்ச்சியும் இன்றி 50% இருக்கை வசதி கொண்டு கிளப்புகள் மற்றும் உணவகங்களில் புத்தாண்டு கொண்டாட அனுமதி

நாடு முழுவதும் அதிகரித்து வரும் ஓமைக்ரான் வைரஸை கருத்தில் கொண்டு வரும் புத்தாண்டு பொதுக்கொண்டாட்டத்திற்கு கர்நாடக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, 50% இருக்கைகள் கொண்ட கிளப்புகள் மற்றும் உணவகங்களில் எந்த சிறப்பு நிகழ்ச்சியும் இல்லாமல் கொண்டாட மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கொண்டாட்ட இடங்களில் அனைவருக்கும் முழு தடுப்பூசி போடுவது கட்டாயமாகும்.  இந்த கட்டுப்பாடுகள் டிசம்பர் 30 முதல் நடைமுறைக்கு வரும் மற்றும் ஜனவரி 2 வரை நடைமுறையில் இருக்கும் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று கூறினார். இதற்கிடையில், கர்நாடகாவில் ஓமைக்ரான் வைரஸால் மேலும் 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை19 ஆக உயர்ந்துள்ளது.

கர்நாடக சுகாதார அமைச்சர் டாக்டர் கே சுதாகரின் கூறுகையில், தார்வாட், சிவமொக்கா மாவட்டத்தில் பத்ராவதி, உடுப்பி மற்றும் மங்களூருவில் நேற்று முன்தினம் ஐந்து பேருக்கு ஓமைக்ரான் வைரஸ் இருப்பது  கண்டறியப்பட்டன. தார்வாட்டைச் சேர்ந்த 54 வயது ஆணும், பத்ராவதியைச் சேர்ந்த 20 வயது பெண்ணும், உடுப்பியைச் சேர்ந்த 82 வயது ஆணும், 73 வயது பெண்ணும், மங்களூருவைச் சேர்ந்த 19 வயது பெண்ணும் ஓமைக்ரான் வைரஸ் உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளன.

author avatar
murugan