நெல்லை மாவட்டம் அருகே சிறுத்தைகளை பிடிக்க கூண்டு! வனத்துறையினர் நடவடிக்கை…

நெல்லை மாவட்டம் வடகரை அருகே உள்ள மேக்கரை அடவிநயினார் அணைப்பகுதியை சேர்ந்தவர் காஜா மைதீன். இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். கடந்த 15-ந்தேதி காலையில் இவர் ராயர்காடு பகுதியில் மேய்ச்சலுக்கு ஆடுகளை விட்டு இருந்தார். அப்போது புதருக்குள் இருந்து வந்த 2 சிறுத்தைகள், ஆடுகள் மீது பாய்ந்து தாக்கின. ஒரு ஆட்டை அடித்துக் கொன்று தின்றன. மேலும் 2 ஆடுகளை அடித்துக் கொன்று காட்டுக்குள் இழுத்து சென்று விட்டன. ஒரு ஆடு காயத்துடன் தப்பி ஓடி வந்து விட்டது.

இதை பார்த்த காஜா மைதீன் மற்றும் அங்கிருந்தவர்கள் அங்கிருந்து ஓடி வந்து விட்டனர். காட்டுப்பகுதியில் இருந்து சிறுத்தைகள் வெளியேறி அட்டகாசம் செய்வதை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.

இதனை ஏற்ற வனத்துறையினர், சிறுத்தைகளை பிடிப்பதற்காக ஜாகீர் உசேன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தின் அருகே கூண்டு வைத்துள்ளனர். அந்த கூண்டின் உள்ளே நாய் ஒன்றும் கட்டி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் கூண்டில் சிறுத்தை சிக்கலாம் என வனத்துறையினரும், பொதுமக்களும் எதிர்பார்த்து உள்ளனர்.

Leave a Comment