கொள்ளையன் நாதுராமுக்கு வந்த ஆசையை பாருங்களே!மிகப்பெரிய அரசியல்வாதியாக வலம் வரணுமாம் …

கொள்ளையன் நாதூராம் ராஜஸ்தானில் தனது சொந்த ஊரில் மிகப்பெரிய அரசியல் வாதியாக வலம் வருவதற்காக கொள்ளை அடித்து பணம் சேர்த்தாக  பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை கொளத்தூரில் முகேஷ் குமார் என்பவருக்கு சொந்தமான நகைக்கடை கடந்த நவம்பர் மாதம் கொள்ளை அடிக்கப்பட்ட விவகாரத்தில், சென்னை ராஜமங்கலம் போலீசார் நாதுராம், தினேஷ் செளத்ரி, பக்தா ராம் ஆகியோரை 10 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடைபெற்றது.

6 நாட்கள் விசாரணை முடிவடைந்த நிலையில் கைது செய்யப்பட்ட அனைவரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

6 நாட்கள் நடத்தப்பட்ட விசாரணையில் நாதுராம் பல்வேறு தகவல்களை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

சொந்த மாநிலத்தில் மிகப்பெரிய அரசியல்வாதியாக வலம் வருவதற்காகவே சிறு வயதில் இருந்து திருட்டில் ஈடுபட்டதாக நாதூராம் தெரிவித்துள்ளான்.

சிறுவனாக இருந்தபோது குஜராத்தின் சூரத்தில் சேலை திருட்டை ஆரம்பித்தாகவும், அதன் பின்னர் தமது 21வது வயதில் மிகப்பெரிய கொள்ளையனாக மாறியதாகவும் கூறியுள்ளான்.

பெங்களூர் நகைக் கடையில் 10 கிலோ நகைக் கொள்ளை தான் மிகப்பெரிய கொள்ளை என போலீசாரிடம் தெரிவித்துள்ள நாதூராம், அதில் 8 கிலோ நகைகளே போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளான்.

தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, குஜராத் ஆகிய மாநிலங்களில் தனது கும்பலுடன் இணைந்து நகை கொள்ளையில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளான்.

சிறு வயதில் ஏழ்மையில் வாழ்ந்த நாதுராம் தொடர் கொள்ளையால் கிடைத்த பணத்தை கொண்டு ராஜஸ்தான் பாலி மாவட்டத்தில் 25 அறைகள் கொண்ட அரண்மனை போன்று வீட்டை கட்டியுள்ளதும் தெரிய வந்துள்ளது.

தனது கொள்ளை தொழிலுக்காக வேவு பார்ப்பவனுக்கு தாம் கொள்ளை அடித்த பொருட்களை சரிசமமாக பங்கீட்டு வந்துள்ளதால் பெரும்பாலான கொள்ளை சம்பவங்களில்  நாதூராம் பிடிபடாமல் இருந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

கொளத்தூர் நகை கடையில் வேவு பார்த்தவன் பக்தாராம் என்பதும், அவனுக்கு கொடுக்கப்பட்ட 1 கிலோ தங்கநகைகள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

நகைகள் மட்டுமல்லாமல் ஒரு கள்ளத்துப்பாக்கியும், ஒரு சொகுசு காரும் பறிமுதல் செய்யப்பட்டது. உள்ளூர் தேர்தலில் நின்று படிப்படியாக மிகப்பெரிய அரசியல் வாதியாக வலம் வரவே இது போன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டதாக நாதுராம் வாக்குமூலம் அளித்துள்ளான்.

நாதுராம் உட்பட 3 பேரின் ஜாமின் மனு எழும்பூர் நீதிமன்றத்தில் வரும் 13ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment