நீதிமன்ற தீர்ப்பு;மதுரை எம்.பி சு.வெங்கடேசனுக்கு எம்.பி கனிமொழி நன்றி…!

மாநில அரசு அனுப்பும் விண்ணப்பத்தில் உள்ள மொழிகளிலேயே மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ள தீர்ப்பை வரவேற்று மதுரை எம்.பி சு.வெங்கடேசனுக்கு எம்.பி கனிமொழி நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழக எம்.பிக்களின் கடிதங்களுக்கு இந்தியில் மத்திய அமைச்சர்கள் பதில் அளிக்கிற சட்ட விரோதமான நடைமுறை நிறுத்தப்பட வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மதுரை எம்பி சு.வெங்கடேசன் அவர்கள் மனுதாக்கல் செய்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில்,”ஒரு மாநில அரசு எந்த மொழியில் விண்ணப்பம் அனுப்புகிறதோ, அந்த மொழியில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்”, என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் இந்த வழக்கில்,”இந்திய அலுவல் மொழிச்சட்டத்தை மத்திய அரசு, அதன் அலுவலர்கள் பின்பற்ற வேண்டும்.செய்தியாக இருந்தாலும் விளக்கமாக இருந்தாலும் அதனை தாய்மொழியில் புரிந்துகொள்ளும் போதுதான் முழுமடைகிறது” என நீதிபதி கருத்து தெரிவித்தார்.

இந்நிலையில்,இந்த தீர்ப்பை வரவேற்று மதுரை எம்.பி சு.வெங்கடேசனுக்கு எம்.பி கனிமொழி நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:

“மக்கள் பிரதிநிதிகள் மத்திய அரசுக்கு ஆங்கிலத்தில் எழுதும் கடிதங்களுக்கு ஆங்கிலத்தில்தான் பதிலனுப்ப வேண்டும்.இந்தியில் பதில் அனுப்புவது அலுவல் மொழிச் சட்டத்திற்கு எதிரானது என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தொடுத்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தோழர் சு.வெங்கடேசன் அவர்களுக்கு நன்றி”,என்று பதிவிட்டுள்ளார்.