உரம்,வேதிப்பொருள் துறையின் நாடாளுமன்றக் குழு தலைவராக எம்பி கனிமொழி நியமனம்..!

மாற்றியமைக்கப்பட்ட இந்திய நாடாளுமன்றக் குழுக்களில் தமிழக எம்பிக்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் இயங்கும் பல்வேறு துறைகளுக்கான நாடாளுமன்ற குழுக்களை மத்திய அரசு மாற்றியுள்ளது.அதன்படி, மாற்றியமைக்கப்பட்ட நாடாளுமன்ற குழுவில் தமிழகத்தை சேர்ந்த தி.மு.க எம்.பி.க்களும் இடம்பெற்றுள்ளனர்.

அந்த வகையில்,உரம், வேதிப்பொருள் துறையின் நாடாளுமன்ற குழு தலைவராக தி.மு.க எம்பி கனிமொழி நியமிக்கப்பட்டுள்ளார்.அத்துறையின் உறுப்பினராக அந்தியூர் எம்பி செல்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து,சுகாதாரத்துறை உறுப்பினராக தி.மு.க எம்பி கனிமொழி சோமு, எம்பி செந்தில்குமார் ஆகியோரும் சட்டத்துறை உறுப்பினர்களாக அ.ராசா, பி. வில்சன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ரயில்வே துறையின் நாடாளுமன்ற குழு உறுப்பினராக டி.ஆர்.பாலு மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.கல்வி, பெண்கள், சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டு துறை உறுப்பினராக தி.மு.க எம்பி ஆர்.எஸ்.பாரதி,எம்பி டி.எம். கதிர் ஆனந்த் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல்,போக்குவரத்து, சுற்றுலா, கலாச்சார துறை நாடாளுமன்ற குழுவின் உறுப்பினராக எம்பி திருச்சி சிவா,எஸ்.எஸ். பழனிமாணிக்கம் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்புத் துறைக்கான உறுப்பினராக என்.ஆர்.இளங்கோ நியமிக்கப்பட்டுள்ளார். எரிசக்தி துறைக்கான உறுப்பினராக டி.கே.எஸ் இளங்கோவன், பி.வேலுச்சாமி, ஞானதிரவியம் ஆகியோரும் , உணவுத்துறைக்கு பி.செல்வம், தகவல் தொழில்நுட்பத் துறைக்கு தமிழச்சி தங்க பாண்டியன் மற்றும் தொழிலாளர் நலத்துறைக்கு எம்.சண்முகம், பெட்ரோலிய துறைக்கு கலாநிதி வீராசாமி ஆகியோரும்  நியமிக்கப்பட்டுள்ளனர்.மேலும்,பாதுகாப்பு துறைக்கான நாடாளுமன்ற குழுவில் தமிழகத்தின் பெரம்பலூர் தொகுதி எம்.பி. பாரிவேந்தர் இடம் பெற்றுள்ளார்.