#BREAKING: ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதில் முகமது சிராஜ் – பிசிசிஐ அறிவிப்பு

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதிலாக முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார் என பிசிசிஐ அறிவிப்பு

டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விலகியதாக தகவல் வெளியாகியிருந்தது. பும்ராவுக்கு முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக 4 முதல் 6 மாதங்கள் வரை ஓய்வு மற்றும் சிகிச்சை தேவை என்பதால் உலகக்கோப்பை தொடரில் விளையாட முடியாது என தகவல் கூறப்படுகிறது. முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக 2 ஆண்டுகளாக பும்ரா இந்திய அணியில் விளையாடாமல் இருந்த நிலையில், ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்ற தொடரில் கடைசி இரு போட்டிகளில் பங்கேற்று விளையாடினார்.

இதனைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் தொடங்கிய தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரிலும் பும்ரா பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென அன்றைய போட்டியில் காயம் காரணமாக பங்கேற்கவில்லை என அறிவிக்கப்பட்டிருந்தது. பும்ராவுக்கு முதுகில் ஏற்பட்ட காயம் முழுமையாக குணமடையவில்லை என்பதால் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளதாக தகவல் கூறப்பட்டது.

மிகவும் எதிர்பார்க்கப்படும் உலகக்கோப்பை தொடரில் ஏற்கனவே ஆல்-ரவுண்டர் ஜடேஜா காயம் காரணமாக விலகிய நிலையில், தற்போது இந்திய அணியின் முதல்தர வேகப்பந்து வீச்சாளர் பும்ராவும் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்திய அணி பந்துவீச்சில் பெரும் பின்னடையவை ஏற்படுத்தியுள்ளது. பும்ரா விலகியுள்ளதால் அவருக்கு பதில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, சிராஜ், ஆவேஷ் கான் உள்ளிட்டோர் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறலாம் என கூறப்பட்டது.

இந்த நிலையில், டி20 அணியில் காயமடைந்த ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதிலாக முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான எஞ்சிய டி20 தொடரில் காயம் அடைந்த ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதிலாக முகமது சிராஜை பிசிசிஐ தேர்வு செய்துள்ளது.முதுகில் காயம் அடைந்து பும்ரா தற்போது பிசிசிஐ மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் உள்ளார்.

இது தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கு மட்டும் தான், இன்னும் டி20 உலகக் கோப்பைக்கு அறிவிக்கப்படவில்லை. இந்திய அணி தற்போது 3 டி20 கொண்ட தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடி வருகிறது. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், நாளை கவுகாத்தியில் இரண்டாவது போட்டி நடைபெற உள்ளது.

தென்னாப்பிரிக்கா டி20 போட்டிகளுக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஆர்.அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், உமேஷ் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ஷாபாஸ் அகமது, முகமது சிராஜ்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment