உலகிலேயே இந்தியா தான் அதிக இளம் தலைமுறையினரை கொண்ட நாடு!

பிரதமர் மோடி சிறப்பான எதிர்காலத்துக்கு புதிய கண்டுபிடிப்புகள் அவசியம் எனக் கூறியுள்ளார்.

விவேகானந்தரின் சிஷ்யை நிவேதிதாவின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, கர்நாடக மாநிலம் தும்கூரில் உள்ள ராமகிருஷ்ணா விவேகானந்தா ஆசிரமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இளைய தலைமுறையுடன் உரையாடுபோதும் ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒன்றை கற்றுக்கொள்ள முடிவதாக கூறினார். தேசத்தை கட்டமைப்பதற்காக சுவாமி விவேகானந்தா தனது வாழ்க்கையை முதலீடு செய்ததாக கூறிய பிரதமர் மோடி, சுதந்திரம் கிடைத்து பல ஆண்டுகளுக்குப் பிறகு நாடு மீண்டும் வலிமையடைந்திருப்பதாக தெரிவித்தார். வடகிழக்கு மாநிலங்களின் தேர்தல் முடிவுகளை அறிய முன்னெப்போதும் இல்லாத வகையில், நாடு முழுவதும் உள்ள மக்கள் ஆர்வம் காட்டியதாக கூறிய பிரதமர் மோடி, பழைய கொள்கைகள் வடகிழக்கு மாநில மக்களை அன்னியப்படுத்தியதாகவும் தெரிவித்தார். கடந்த 4 ஆண்டுகளில் வடகிழக்கு மாநிலங்களுக்கும், நமக்கும் இடையிலான இடைவெளியை இணைக்க முயற்சித்தாகவும், ஒருங்கிணைப்பின் மூலம் தீவிரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்றும் கூறினார்.

உலகிலேயே இந்தியா தான் அதிக இளம் தலைமுறையினரை கொண்ட நாடு என கூறிய பிரதமர் மோடி, இந்தியாவில் 35 வயதுக்கு குறைவானோர் 65% பேர் இருப்பதாக தெரிவித்தார். முத்ரா யோஜனா திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு பெரும் எண்ணிக்கையில் கடன் வழங்கியிருப்பதாகவும், ஸ்டான்ட்அப், ஸ்டார்ட் அப் திட்டங்கள் மூலம் இளைஞர்களுக்கிடையே தொழில் முனைவு அதிகரித்திருப்பதாகவும் பிரதமர் மோடி கூறினார். புதிய யோசனைகளுக்கு இளைஞர்களிடம் பற்றாக்குறை இல்லை என குறிப்பிட்ட அவர், புதிய கண்டுபிடிப்புகளே எதிர்காலம் என்றும் தெரிவித்தார். பள்ளி மாணவர்களின் யோசனைகளை பயன்படுத்த அரசு முயற்சிப்பதாக கூறிய பிரதமர் மோடி, புதியன படைக்கும் எண்ணத்தை ஊக்குவிக்க நாடு முழுவதும் பள்ளிகளில் 2,400 அடல் மேம்பாட்டு ஆய்வகங்கள் (Atal Tinkering Lab) அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment