விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்களை மு.க.ஸ்டாலின் ஏமாற்றி விட்டார் – எடப்பாடி பழனிசாமி

தேர்தல் நேரத்தில் பொய் வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றியது திமுக என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி குற்றசாட்டு.

ஊரக உள்ளாட்சித் தேர்தளையொட்டி விழுப்புரம் மாவட்டத்திற்கு தேர்தல் பரப்புரை மேற்கொள்ள சென்ற இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, அதிமுக நிர்வாகிகள், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மத்தியில் இன்று காலை உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சரியில்லை, தேர்தல் நேரத்தில் அளித்த அறிவிப்புகளும் நிறைவேற்றப்படவில்லை. விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏமாற்றி விட்டார்.

விழுப்புரம் மாவட்டத்தில் முறையாக துவங்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பணிகளை தொடராமல் முடக்குகிறது திமுக. மக்களுக்காக உழைக்கும் விவசாயிகளின் நெல் மணிகளை கொள்முதல் செய்யாமல் விவசாயிகளை வஞ்சிக்கிறது திமுக அரசு.

தேர்தல் நேரத்தில் பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி மக்களை ஏமாற்றியது திமுக என்றும் முதியோர் உட்பட அனைவரையும் ஏமாற்றி, வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டுவிட்டார் முதல்வர் ஸ்டாலின் எனவும் தெரிவித்தார்.

கூட்டுறவு சங்கத்தில் பெற்ற நகைக்கடன், மகளிர் சுய உதவி குழு கடன்களை தள்ளுபடி செய்யாமல் ஏமாற்றுவதாகவும் குற்றசாட்டிய எதிர்க்கட்சி தலைவர், பயிர் காப்பீடு திட்டத்தின் மூலம் இந்தியாவிலேயே விவசாயிகளுக்கு அதிக இழப்பீட்டை பெற்றுத்தந்தது அதிமுக அரசு தான் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், பல்வேறு சிறப்பான திட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு நம்மை செய்தது அதிமுக அரசு தான் என்றும் அதிமுக அரசின் சிறப்பான முயற்சிகளால், தமிழ்நாட்டில் உயர்கல்வி படிப்போரின் எண்ணிக்கை அதிகரித்தது எனவும் பேசியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்