ஹைதராபாத் அணியில் மிட்செல் மார்ஷ் விலகல்.. ஜேசன் ராய் ஒப்பந்தம்..!

மிட்செல் மார்ஷுக்கு மாற்றாக ஜேசன் ராய் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பெற்றுள்ளார்.

இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டிகள் வரும் 9-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்காக 8 அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில் இந்த வருட ஒட்டுமொத்த ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகுவதாக மிட்செல் மார்ஷ் தெரிவித்தார்.

ஐபிஎல் போட்டி துவங்குவதற்கு முன் ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் ஐபிஎல் 2021-லிருந்து விலகியதால், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. சில காரணங்களால் மிட்செல் ஐபிஎல்லிலிருந்து விலகுவது இது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த ஐபிஎல்தொடரில் தொடக்க ஆட்டத்தின் போது மார்ஷ் காயம் ஏற்பட்டது.

பின்னர் காயம் காரணமாக முழு லீக்கிலும் இருந்து விலகினார். இந்நிலையில்,  மிட்செல் மார்ஷுக்கு பதிலாக ஜேசன் ராய் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு  ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 2010 இல் ஐபிஎல்லில் அறிமுகமான மார்ஷ் மொத்தம் 21 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார். அவருக்குப் பதிலாக களமிறங்கும் ஜேசன் ராய் 2017 ஆம் ஆண்டில் குஜராத் லயன்ஸ் அணிக்காக ஐபிஎல் அறிமுகமானார்.

பின்னர் 2018 ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் இடம்பெற்றார். அவர் மொத்தம் 8 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் ஒரு அரைசதத்துடன் 179 ரன்கள் எடுத்தார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ராயை தனது அடிப்படை விலையான 2 கோடி ரூபாயில் வாங்கியுள்ளது.

author avatar
murugan