அமைச்சர் துரைக்கண்ணுக்கு நெஞ்சுவலி..!நாடித்துடிப்பு குறைந்த நிலையில் அனுமதி!

வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு திடீரென மூச்சுத்திணறல் மற்றும் நெஞ்சுவலி ஏற்பட்டு நாடித்துடிப்பு குறைந்த நிலையில் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி, சிலுவம்பாளையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் மறைவிற்கு இறுதி அஞ்சலி செலுத்த சென்னையிலிருந்து  தனது காரில் வேளாண்மை துறை அமைச்சர்  துரைக்கண்ணு புறப்பட்டு சென்றார்.

இந்நிலையில் பாதி வழியிலேயே  அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு  (72) நேற்று காலை 10.45 மணியளவில் திடீரென மூச்சுத்திணறல் மற்றும் நெஞ்சுவலி ஏற்பட்டு நாடித்துடிப்பு குறைந்தது.

இதனால் அவர் முண்டியம்பாக்கத்திலுள்ள விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அரசு மருத்துவக்கல்லூரியின் டீன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் அமைச்சருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

இதன் பின் 12.50 மணிக்கு மேல் சிகிச்சைக்கு  சென்னை ஆழ்வார்பேட்டை  தனியார் மருத்துவமனைக்கு சிறப்பு ஆம்புலன்ஸ் மூலம் 4 டாக்டர்கள் கொண்ட குழுவினர் அமைச்சருக்கு ஆக்ஸிஜன் செலுத்தியவாறே அவரை அழைத்து வந்தனர்.

இந்நிலையில் சென்னை வந்த அவருக்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுபற்றி விழுப்புரம் மருத்துவக் கல்லூரி டீன் குந்தவி தேவி கூறியுள்ளதாவது:

அமைச்சர் துரைக்கண்ணு மருத்துவமனைக்கு வந்த போது அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. தற்போது அவர் நல்ல நிலையில் உள்ளார். மேலும் சிகிச்சை தொடர வேண்டிய தேவை இருப்பதால் சென்னைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

கடந்த 3 நாட்களுக்கு முன்பே அமைச்சர் சென்னையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து உள்ளார். மருத்துவமனைக்கு வரும்போது நாடி துடிப்பு 82 ஆக இருந்தது. தற்போது 96ஆக உள்ளதால் நாடி துடிப்பு அமைச்சருக்கு சீராக உள்ளது என்று தகவல் தெரிவித்தார்.

இந்நிலையில் அமைச்சர் துரைக்கண்ணு சென்னையில் மேல்சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 .
author avatar
kavitha