தமிழக முழுவதும் 1 லட்சம் இடங்களில் நாளை மெகா தடுப்பூசி முகாம்!

தமிழ்நாட்டில் 99 லட்சத்து 56 ஆயிரத்து 665 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.

நாடு முழுவதும் கொரோனா பரவல் தற்போது சற்று அதிகரித்து வருகிறது. உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கொரோனா நெறிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வருகின்றன. இதில், தமிழகத்திலும் தொற்று சற்று அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மத்திய சுகாதார அமைச்சகம், மாநில அரசுகளுக்கு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

பிஏ4, பிஏ5 வகை தொற்று தமிழகத்தில் பரவ தொடங்கியுள்ளதாகவும், இதில் பிஏ4 வகை 7 பேருக்கும், பிஏ5 வகை 11 பேருக்கும் பரவியுள்ளதாகவும் சுகாதார துறை தரப்பில் கூறப்பட்டது. எனவே, தடுப்பூசி செலுத்தாமல் உள்ளவர்கள் மூலம் அது பரவும் ஆபத்து உள்ளதால் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தடுப்பூசி மெகா முகாம்களை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. சமீப காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தடுப்பூசி முகாம்கள் நாளை மீண்டும் தொடங்கப்பட உள்ளது.

அதன்படி, தமிழகம் முழுவதும் நாளை ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்திருந்தார். தமிழ்நாட்டில் 99 லட்சத்து 56 ஆயிரத்து 665 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். முன்களப்பணியாளர்களுக்கும் 60 வயதை கடந்தவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி மெகா தடுப்பூசி முகாம் கடந்த மாதம் ஒரே நாளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்டு, 17.75 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. அந்த வகையில் நாளை மீண்டும் ஒரு லட்சம் இடங்களில் தமிழகம் முழுவதிலும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment