முழு ஊரடங்கின் போது வீட்டில் மது விற்பனை செய்த நபர் கைது!

சென்னை விருகம்பாக்கத்தில் முழு ஊரடங்கு நேரத்தில் வீட்டில் வைத்து மது விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே செல்லும் நிலையில், கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக மே 10ஆம் தேதி முதல் வருகிற 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவும் தமிழ்நாடு முழுவதிலும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஊரடங்கின் போது சுற்றுலாத்தலங்கள், மத வழிபாட்டுத் தலங்கள், மால்கள், மதுபான கடைகள் என அனைத்து இடங்களுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அனைத்து டாஸ்மார்க்குகளும் மூடப்பட்டுள்ளதால் குடிமகன்கள் அனைவரும் பெரும் வேதனையில் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், விருகம்பாக்கம் ஆற்காடு சாலை நாராயணசாமி தெருவில் உள்ள ஒரு வீட்டில் அதிக அளவில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அதிரடியாக அந்த வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர். அப்பொழுது அந்த வீட்டில் இருந்த விலை உயர்ந்த பல மதுபாட்டில்கள் உட்பட மொத்தம் 2,198 மது பாட்டில்கள் இருந்தது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்து வந்த முருகன் என்பவரை போலீசார் கைது செய்ததுடன், அவரிடம் இருந்த 2,198 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

author avatar
Rebekal