எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கியவர் தான் பிரதமர் மோடி… கார்கே தேர்தல் பரப்புரை!

Election2024: மத்திய பாஜக சில மாநிலங்களில் குறுக்கு வழியில் ஆட்சி அமைகிறது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பரப்புரை.

தமிழ்நாட்டில் திமுக தலைமையில் கூட்டணியில் காங்கிரஸ் புதுச்சேரி உட்பட 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரமும் பரபரப்பராக நடந்து வருகிறது. சமீபத்தில் ராகுல் காந்தி தமிழகம் வருகை தந்து இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

அந்தவகையில் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து அக்கட்சி தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று பாஜகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடவில்லை.

இதன் மூலம் புதுச்சேரி மக்களை பாஜக புறக்கணிக்கிறது என்று தெளிவாக தெரிகிறது. ஆனால், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கி மீண்டும் ரேஷன் கடைகள் திறக்கப்படும் என காங்கிரஸ் உறுதியளித்துள்ளது. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை பாஜக அரசு கைக்குள் போட்டுகொண்டு தலையாட்டி பொம்மை போல் வைத்துள்ளனர்.

புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசை துணைநிலை ஆளுநர் வைத்து தொல்லை கொடுத்தனர். இந்த மோடி அரசு தொடர்ந்து செய்து வருகிறது. பிரதமர் மோடி மக்களின் நம்பிக்கையை இழந்து வருகிறார். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. நாடு வளர்ச்சியடைந்துவிட்டதாக கூறும் பிரதமர் மோடி 100 நாள் வேலை திட்டத்தை ஏன் செயல்படுத்தவில்லை.

இந்தியா முழுவதும் பல எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கியவர் தான் பிரதமர் மோடி. மத்திய பாஜக அரசு சில மாநிலங்களில் தேர்தல் முறையில் ஆட்சிக்கு வராமல் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்கிறது. பல்வேறு மாநிலங்களில் எம்.எல்.ஏ, எம்.பி.கள் மீதும் பொய் வழக்கு போடுவதை வழக்கமாக கொண்டுள்ளது. ஆளுநர்கள் மூலம் தமிழ்நாடு, புதுச்சேரி மாநில அரசுகளுக்கு நெருக்கடியை கொடுக்கின்றது பாஜக அரசு. எனவே, இந்தியாவின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் நாம் பாடுபட வேண்டும் என தெரிவித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்