மதுரையின் சிறந்த பொழுபோக்கு அண்ணன் ‘செல்லூர் ராஜூ’ – அமைச்சர் தங்கம் தென்னரசு நகைச்சுவை!

தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்ற நிலையில், எதிர்க்கட்சியினர் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்துள்ளனர்.அந்த வகையில்,மதுரை மாவட்டத்தின் மெரினாவாக இருக்கும் மாரியம்மன் கோயில் தெப்பகுளத்தில் லேசர் ஷோ நடத்தினால் மிகவும் நன்றாக இருக்கும் என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜூ கூறினார்.இதற்கு பதிலளித்த சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் அவர்கள்,தங்களது கோரிக்கை குறித்து தமிழக அரசு பரிசீலிக்கும் என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து,மதுரை மக்கள் பொழுதை கழிக்க பொழுபோக்கு இடமில்லை எனவும், மதுரையில் பொழுதுபோக்கு இடங்களை அரசு ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் செல்லூர் ராஜூ அவர்கள் கூறினார்.இந்நிலையில்,அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜூ மதுரையின் சிறந்த பொழுதுபோக்காக இருப்பதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக,அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் பேரவையில் கூறியதாவது:”மதுரையின் மிகப்பெரிய பொழுதுபோக்கே அண்ணன் செல்லூர் ராஜூ அவர்கள்தான்.இது நாட்டில் உள்ள அனைவருக்குமே தெரியும்”,என்று நகைச்சுவையாக பதில் அளிக்க பேரவையில் இருந்த அனைவரும் சிரிப்பலையில் மூழ்கினர்.