ஐபிஎல் 2024 : காத்திருங்க கம்பேக் ஓட வரோம்! தோல்விக்கு பின் ஹர்திக் பாண்டியா!

ஐபிஎல் 2024 : மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா தொடர் தோல்வி குறித்து நேற்று நடந்த போட்டிக்கு பிறகு கூறி இருக்கிறார். மேலும்,  X தளத்திலும் தற்போது ரசிகர்களை ஊக்குவிக்கும் வகையிலும் பதிவிட்டுள்ளார்.

நடைபெற்று வரும் 2024 ஆண்டின் ஐபிஎல் தொடரின் முதல் 3 போட்டிகள் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வி அடைந்துள்ளது. நேற்று நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் அணி, மும்பை அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் மும்பை அணி இந்த ஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் தோல்வியை பெற்றுள்ளது. இந்த போட்டி முடிந்த பிறகு தோல்விக்கான காரணம் குறித்து ஹர்திக் பாண்டியா பேசி இருந்தார்.

அவர் கூறுகையில், “நாங்கள் 150 முதல் 160 ரன்களை எடுப்பதற்கு ஒரு தகுதியான நிலையில் தான் இருந்தோம். அதன் பிறகு எனது விக்கெட் தான் ஆட்டத்தின் போக்கை மாற்றியது என்று நான் நினைக்கிறன். ராஜஸ்தான் அணியை மீண்டும் ஆட்டத்திற்குள் கொண்டு வந்ததும் எனது விக்கெட் தான். மேலும், என்னால் சிறப்பாக செய்திருக்க முடியும் ஆனால் என்னால் முடியவில்லை.

நாம் முடிவு எடுப்பது சில சமயங்களில் அது நடக்காமல் போய்விடும். இந்த தோல்வி என்னை ஆச்சரியப்படுத்துவதாக நான் நினைக்கவில்லை. ஆனால், இந்த தோல்வியிலிருந்து ஒரு குழுவாக நாங்கள் முன்னோக்கிச் செல்வோம் என்று நாங்கள் நம்புகிறோம். மேலும், நாங்கள் இன்னும் ஒழுக்கமாகவும், தைரியமாகவும் இருக்க வேண்டும்”, என்று தோல்விக்கு பாண்டியா பேசி இருந்தார்.

அதனை  தொடர்ந்து இன்று காலை ரசிகர்களை ஊக்குவிக்கும் வகையில், ” உங்களுக்கு ஒன்றே ஒன்று எங்கள் அணியை பற்றி நன்றாக தெரியும், நாங்கள் ஒரு போதும் விட்டுக்கொடுக்க மாட்டோம். நாங்கள் தொடர்ந்து போராடுவோம், முன்னோக்கி செல்வோம்” என்று ஹர்திக் பாண்டியா அவரது X தளத்தில் பதிவிட்டு இருந்தார்.

author avatar
அகில் R
நான் அகில் R, மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பட்டதாரியான நான் கடந்த 6 மாத காலமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். விளையாட்டு, சினிமா, தொழில்நுட்பம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.