நீட் தேர்வு நல்லது என்று வீதி வீதியாக சென்று சொல்வோம்- தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ..!

நீட் ஏழை எளிய குடும்பங்களுக்கான வரப்பிரசாதமாக இருக்கிறது என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இன்று தமிழக பாஜக புதிய தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, எல்.முருகன் அவர்கள் தலைமையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி டெல்லியில் பாஜகவில் இணைந்தேன். காவல்துறையில் 9 ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் பிரதமர் மோடி மீது கொண்ட பற்றினால் பணியைத் துறந்து, எனக்கு பிடித்த விவசாயத்தை செய்து வந்தேன். கடந்த 10 மாதமாக பாஜகவின் துணை தலைவராக பொறுப்பேற்று எனது பணியை செய்து கொண்டு வந்தேன்.

இங்கு உள்ள அனைத்து தலைவர்களும், டெல்லியில் உள்ள தலைவர்களும் எனக்கு இந்த புது பொறுப்பை கொடுத்து இதன் மூலமாக கட்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என நம்பி இந்த பொறுப்பை கொடுத்துள்ளார்கள். இதை மகிழ்ச்சியுடன், மிகுந்த ஆனந்தத்துடன், மிகவும் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன்.

எங்களுடைய கட்சி ஒரு வித்தியாசமான கட்சி திருமணமாகாதவர்கள் 90 வயது வரை எங்கள் கட்சியை வழி நடத்தியுள்ளார்கள். ஆட்சிக்கு வந்த 70 நாட்களில் ஒரு தேர்தல் வாக்குறுதியைக் கூட திமுக முழுமையாக நிறைவேற்றவில்லை. நீட் தேர்வால்  கிராமப்புற மாணவர்கள் அதிகம் பேருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. எதற்காக திமுக நீட் வேண்டாம் என்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. நீட் ஏழை எளிய குடும்பங்களுக்கான வரப்பிரசாதமாக இருக்கிறது. நீட் தேர்வு நல்லது என்று வீதி வீதியாக சென்று மக்களிடம் சொல்வோம்.

தமிழக மற்றும் இந்திய ஊடகங்களின் மீது பாஜக மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ளது. ஐ.டி. சட்டம் குறித்து நான் பேசியதை ஊடகங்கள் குறித்து பேசியதாக தவறாக சித்தரிக்கின்றனர் என தெரிவித்தார்.

author avatar
murugan