தமிழகத்தில் பாரம்பரியமாக நடத்தப்படும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் நாட்டு இன மாடுகளை மட்டுமே பயன்படுத்த அனுமதித்து உத்தரவிட வேண்டும்.ஏனெனில்,நாட்டு மாடுகளுக்குப் பெரிய திமில் இருக்கும் என்பதால் ஜல்லிக்கட்டு வீரர்கள் பிடிக்க வசதியாக இருக்கும் எனவும் சென்னையை சேர்ந்த சேஷன் என்பர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஏற்கனவே தொடர்ந்திருந்தார்.மேலும்,ஜல்லிக்கட்டில் வெளிநாடு மற்றும் கலப்பின மாடுகள் பங்கேற்கத் தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார்.
இவ்வழக்கை,விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,தமிழகத்தில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் நாட்டு மாடுகளை மட்டுமே பங்கேற்க அனுமதித்து உத்தரவிட்டது.மேலும்,ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுகள் நாட்டு மாடுகள்தான் எனக் கால்நடை மருத்துவர்கள் சான்றளிக்க வேண்டும் எனவும் பொய் சான்றிதழ் அளித்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கலாம் என்றும், மேலும்,வெளிநாட்டு மற்றும் கலப்பின மாடுகளைப் பங்கேற்க அனுமதிக்கக் கூடாது எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில்,சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.அதில்,செயற்கை கருவூட்டல் சம்மந்தமாக இருக்கக்கூடிய முக்கியமான அம்சங்கள் எதுவும் கவனத்தில் கொள்ளாமல் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என தெரிவித்திருந்தது.இதனைத் தொடர்ந்து,தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம்,தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் நாட்டு இன மாடுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.மேலும்,இவ்வழக்கு தொடர்பாக எதிர் மனுதாரர் நான்கு வாரத்தில் பதில் அள்ளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.