ஜெயலலிதா மரணம் – ஓ.பன்னீர்செல்வத்திடம் இன்றும் விசாரணை!

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம்,அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்கள் மார்ச் 21-ஆம் தேதி(நேற்று) ஆஜராக வேண்டும் என்று ஏற்கனவே சம்மன் அனுப்பியது.மேலும் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசிக்கும் சம்மன் அனுப்பப்பட்டது.

சசிகலா தான் பார்த்துக்கொண்டார்:

jeyalalitha

அதன்படி,ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா அண்ணன் மனைவி இளவரசி நேற்று ஆஜராகினார்.இவரிடம் 10:30 – 11:30 மணி வரை விசாரணை நடைபெற்றது.

அப்போது,”அப்பல்லோ மருத்துவமனையில், ஜெயலலிதா அவர்கள் இருந்தபோது சசிகலா மட்டுமே உடனிருந்து பார்த்துக் கொண்டார் எனவும்,75 நாட்களும் மருத்துவமனைக்கு தான் சென்று வந்ததாகவும்,ஆனால் ஓரிரு முறை மட்டுமே கண்ணாடி வழியாக ஜெயலலிதாவை பார்த்ததாகவும் இளவரசி ஆறுமுகசாமி ஆணையத்தில் கூறியதாக தகவல் வெளியாகியது.

மேலும்,2014 ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றபோது மன உளைச்சலுடன் இருந்தார்.2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது அவரது உடல்நலக்குறைவுடன் இருந்தார் எனவும் இளவரசி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதைத் தவிர எனக்கு வேறு ஏதும் தெரியாது:

 

இதனையடுத்து,அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் நேற்று ஆஜராகினார். அப்போது நடைபெற்ற விசாரணையில்,ஜெயலலிதாவுக்கு சர்க்கரை அளவு அதிகமாக இருந்ததை தவிர வேறு உபாதைகள் அவருக்கு இருந்தது தனக்கு தெரியாது என்று ஆறுமுக சாமி ஆணையத்தின் விசாரணையில் ஓபிஎஸ் கூறியுள்ளார்.

மேலும்,2016 ஆம் ஆண்டு செப்.22 ஆம் தேதி ஜெயலலிதா அவர்கள் அப்பல்லோ மருத்துவமனையில் எதற்காக அனுமதிக்கப்பட்டார்? என்ன சிகிச்சை வழங்கப்பட்டது என்று தனக்கு தெரியாது,அந்த சமயத்தில் தான் சொந்த ஊரில் இருந்ததாகவும்,உதவியாளரின் மூலம்தான் இந்த தகவல் கிடைத்ததாகவும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு பிறகு ஜெயலலிதாவை பார்க்கவில்லை:

அதன்பின்னரே,அடுத்த நாள் சென்னை வந்து மருத்துவமனைக்கு சென்று அங்கிருந்த தலைமைச்செயலாளரிடம் விவரங்களை கேட்டதாகவும், மேலும், ஜெயலலிதாவுக்கு சர்க்கரை அளவு அதிகமாக இருந்ததை தவிர வேறு உபாதைகள் அவருக்கு இருந்தது தனக்கு தெரியாது என்றும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும்,மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய தினம் மெட்ரோ ரயில் நிகழ்வில் கலந்து கொண்டபோது ஜெயலலிதாவை பார்த்ததாகவும்,அதற்கு பின்னர் அவரை பார்க்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

பொதுமக்களின் எண்ணம்:

OPS

ஜெயலலிதா அவர்களின் மரணம் தொடர்பாக விசாரிக்க பொதுமக்களின் எண்ணத்தின் அடிப்படையிலேயே ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.துணை முதல்வர் என்ற முறையில் ஆணையத்தின் கோப்பில் தான் கையெழுத்திட்டதாகவும் ஓபிஎஸ் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியது.

மேலும்,”மருத்துவமனையில் காவிரி விவகாரம் குறித்து ஜெயலலிதா நடத்திய ஆலோசனை கூட்டம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது.இது தொடர்பாக அறிக்கை வந்த பின்பே, அக்கூட்டம் குறித்து எனக்கு தெரிய வந்தது,ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விஜய பாஸ்கரிடம் தான் கேட்டறிந்தேன்”,என்றும் ஓபிஎஸ் கூறியுள்ளார்.

இடைவேளை:

இதனைத் தொடர்ந்து,இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ஓபிஎஸ் அவர்களிடம்  விசாரணை நடைபெற்று வந்த நிலையில்,உணவு இடைவேளை விடப்பட்டுள்ளது.இடைவேளைக்கு பின்னர் 3 மணியளவில் அவரிடம் மீண்டும் விசாரணை நடைபெற்றது.

சிசிடிவிகளை அகற்ற கூறவில்லை :

ops

ஜெயலலிதா மரணம் தொடர்பாக நேற்று காலை மற்றும் பிற்பகல் நடந்த விசாரணையில் ஓ.பன்னீர்செல்வத்திடம் இதுவரை 78 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.இந்த விசாரணையில், அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற பகுதியில் சிசிடிவிகளை அகற்ற கூறவில்லை என்றும் தர்மயுத்தம் தொடங்கியதில் இருந்து துணை முதலமைச்சராக பொறுப்பு ஏற்றது வரை நான் அளித்த பேட்டிகள் அனைத்தும் சரியானது எனவும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

இன்றும் விசாரணை:

இந்நிலையில்,இன்றும் விசாரணைக்கு ஆஜராக ஓபிஎஸ்-க்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.அதன்படி,அவர் இன்றும் ஆஜராகி வாக்குமூலம் அழைக்க உள்ளார்.