ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா!

ஒளியே ஐயப்பன் ; ஒலியே ஐயப்பன்!

விரதம் இருந்து, மாலையணிந்து, கருப்பு, காவி நிற ஆடைகளை அணிந்து, இருமுடி சுமந்து, மலையேறி, மணிகண்டனைத் தரிசித்து, மகரஜோதியையும் பார்த்தவர்கள், அன்றைக்கு 200 பேருக்கும் குறைவாகத்தான் இருந்தார்கள். அவர்கள், மகரஜோதியைத் தரிசித்ததை, மெய்சிலிர்க்க விவரிக்க, கேட்பர்கள் மெய்ம்மறந்து போவோம்!

இன்றைக்கு அப்படியா? லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில், ஜோதி பார்க்கக் கூடுகிறார்கள். இந்த வருடமும் கட்டுக்கடங்காத கூட்டம். மலையளவு கூட்டம். அந்த மலையே நிறைந்திருக்கும் அளவுக்கு கூட்டம். அதுமட்டுமா? மகரஜோதி தரிசனத்தை, தொலைக்காட்சிகள் லைவ் நிகழ்ச்சிகளாகவே ஒளிபரப்புகின்றன. எத்தனை வேலைகள் இருந்தாலும் அந்த சமயத்தில், மகரஜோதி தரிசனத்தை, தொலைக்காட்சி மூலம் கண்டு, தரிசித்து, சிலிர்த்து, பிரார்த்தனை செய்கிற முதியோர்களும் பெண்களும் குழந்தைகளும் உடல்நலக் குறைபாடு கொண்டவர்களும் ஏராளம்!
ஜோதி என்பது நம் வாழ்வில் இரண்டறக் கலந்த ஒன்று. ஒளி என்பது நம் வாழ்வில், நல்ல அதிர்வுகளை உருவாக்கக் கூடியவை. ஜோதியாகவும் ஒளியாகவும் திகழ்கிற சூரியனை, அதனால்தான் கடவுளாகவே கொண்டாடுகிறோம். சூரிய பகவான் என்று சொல்லி வணங்குகிறோம்.
திருவண்ணாமலை கார்த்திகை ஜோதியும் தைப்பூசத்தில் வடலூரில் வள்ளலார் ஜோதி தரிசனமும் இதே சிலிர்ப்பையும் உள்ளே ஒரு சுடரையும் பற்றவைத்து, நம்மை என்னவோ செய்வதை நம்மில் பலரும் உணர்ந்திருப்பார்கள்.
சபரிமலை எனும் புண்ணியத் தலமும் அப்படித்தான்! ஜோதிசொரூபனாக, ஜோதியாக ஐயன் ஐயப்ப சுவாமி காட்சி தரும் ஒப்பற்ற திருத்தலம் என்று உலகமே இன்றைக்கும் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. ஒளியே கடவுள், ஜோதியே இறைவன் என்பதை உணர்த்துகிறார் சாஸ்தா.
தத்வமஸி எனும் தத்துவத்தை உணர்த்தும் வகையில், கருவறையில் குடிகொண்டிருக்கும் ஐயப்பசுவாமி விக்கிரக ரூபமாக, ஞானச் சுடராக, ஞான ஜோதியாக, காட்சி தந்துகொண்டிருக்கிறார்.
ஐம்பதுகளில் நிகழ்ந்த அந்தச் சம்பவம் நினைவுக்கு வருகிறது. அப்போது சபரிமலையில் நிகழ்ந்த தீவிபத்து, இப்போது பலருக்கும் தெரிந்திருக்கவில்லை. அப்போது தெரிந்தவர்கள், அதை மறந்திருக்கவே மாட்டார்கள்.
சபரிமலையில் தீ விபத்து. இது விபத்தே இல்லை என்று சொல்பவர்களும் உண்டு. கேரளத்தின் போலீஸ் ரிக்கார்டில் விபத்து என்றுதான் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆக சபரிமலையில் தீ விபத்து என்ற செய்தி, காட்டுத்தீயெனப் பரவியது.
இப்போது போல, 24 மணி நேர சேனல்களெல்லாம் இல்லாத காலகட்டம் அது. செல்போன் வசதியோ போன் வசதியோ, முகநூல், டிவிட்டர் வசதியோ இல்லை. ஆனாலும் செய்தி நாலா பக்கமும் பரவியது. பக்தர்கள் தவித்துப் போனார்கள். என்ன செய்வது என்று தெரியாமல் கலங்கினார்கள்.
தந்த்ரி, மேல்சாந்தி, கீழ் சாந்தி, சபரிமலைக்கு நெருக்கமாக இருந்து முக்கியஸ்தர்கள், கேரள அரசு என பலவிதங்களில், கோயில் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றன. கட்டடங்கள் புதுப்பிக்கப்பட்டன.
தீ விபத்தில் ஐயப்ப விக்கிரகம் சற்றே பின்னமடைந்திருந்தது. பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட விக்கிரகத் திருமேனி அது. பின்னமடைந்த விக்கிரகம் கொண்டு பூஜிக்கவோ தரிசிக்கவோ கூடாது என்கிறது ஆகம சாஸ்திரம்.
அந்த சமயத்தில், நவாப் ராஜமாணிக்கமும் பி.டி.ராஜனும் சேர்ந்து, ஐயப்ப விக்கிரகம் ஒன்றைச் செய்தார்கள். நவாப் ராஜமாணிக்கம் பற்றி தெரியும்தானே.
நடிகர் எம்.என். நம்பியாரை, சினிமாவைக் கடந்து நமக்கெல்லாம் எப்படியாகத் தெரியும். அவர் ஐயப்ப பக்தர். ஐயப்பனே கதியென அவரையே பற்றிக் கொண்டு வாழ்ந்தவர். நம்பியார் குருசாமி என்று எல்லோராலும் அழைக்கப்பட்டவர். பிறகு குருசாமி என்றாலே நம்பியார்தான் அது என்று எல்லோரும் மரியாதையுடன் அவரைக் கொண்டாடினார்கள். அப்பேர்ப்பட்டவருக்கு, ஐயப்ப பக்தியை விதைத்தவரே நவாப் ராஜமாணிக்கம் பிள்ளைதான்!
Image result for iyappan
ஆமாம். நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை, மிகப்பெரிய நாடகக் கம்பெனி வைத்திருந்தார். அதில் சேர்ந்து நடித்து வந்தவர் நம்பியார். நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை, தீவிரமான ஐயப்ப பக்தர். அவர், எங்கெல்லாம் நாடகம் போடுகிறாரோ அங்கெல்லாம் ஐயப்ப சுவாமியின் படத்தை வைத்து, பூஜை போட்ட பிறகே நாடகத்தைத் தொடங்குவார். இப்படி ஊர் ஊராகச் சென்று, நாடகம் போடுகிற வேளையில், மக்களுக்குள் ஐயப்ப பக்தியை அவர்தான் கொண்டுவந்தார் என்று கொண்டாடுகிறார்கள், இன்றைக்கும்!
Image result for iyappan
மதுரை பி.டி.ராஜனும் நவாப் ராஜமாணிக்கம் பிள்ளையும் சேர்ந்து ஐயப்ப விக்கிரத்தைச் செய்து வைத்திருந்தார்கள். அதேபோல், பாலக்காடு சாமி அண்ணாவும் விக்கிரகம் செய்திருந்தார். இவர்கள் மட்டுமின்றி, கேரளத்தைச் சேர்ந்த சுவாமி விமோசனானந்தாவும் ஐயப்ப விக்கிரகம் செய்திருந்தார்.
அதையடுத்து, குடவோலை முறைப்படி, ஐயப்பன் சந்நிதியில் சீட்டுப் போட்டு பார்க்கப்பட்டது. அதில் நவாப் ராஜமாணிக்கம் பிள்ளையும் பி.டி.ராஜனும் பெயர்கள் வந்தன. அவர்கள் வழங்கிய விக்கிரகத்தைத்தான் இன்றைக்கும் தரிசித்துக் கொண்டிருக்கிறோம்.
சாமி அண்ணா, அவர் செய்த விக்கிரகத்தை தன்னுடைய பாலக்காட்டின் வீட்டிலேயே வைத்து பூஜித்து வந்தார். அந்த விக்கிரகம் இன்றைக்கும் அவரின் வழித்தோன்றல்களான ஐயப்ப உபந்யாசகர் அரவிந்த் சுப்ரமண்யம் மற்றும் அவர்களின் குடும்பத்தாரால் பூஜை செய்யப்பட்டு வருகிறது.
சுவாமி விமோசனானந்தா செய்த விக்கிரகத்தை, காசி க்ஷேத்திரத்தில் உள்ள திலபாண்டீஸ்வரர் கோயிலில், பிரதிஷ்டை செய்தார். காசி விஸ்வநாதர் கோயிலில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள திலபாண்டீஸ்வரர் கோயிலில், பதினெட்டுப் படிகளுடன் ஐயப்பன் அழகு ததும்பக் காட்சி தந்துகொண்டிருக்கிறார்!
பரசுராமர் பிரதிஷ்டை செய்த விக்கிரகம்?
சபரிமலையில், பதினெட்டுப் படிகள் ஏறியதும், ஐயப்ப சுவாமியின் சந்நிதி. இந்த சந்நிதிக்கு எதிரில், மணி மண்டபம். அதாவது, மணி இருக்கும் மண்டபம். இந்த மணி… கோயில்மணி. கோயில்மணி மட்டுமா? பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஐயப்ப விக்கிரகம், பின்னம் அடைந்த பிறகு, அந்த விக்கிரகத்தை அப்படியே மணியாக்கி, சந்நிதிக்கு எதிரே கட்டிவைக்கப்பட்டது. மணி ரூபத்தில் காட்சி தரும் மணிகண்ட சுவாமி, ஒலி ரூபமாகவும் அதாவது சப்தமாகவும் இருந்து அருள்பாலிக்கிறார்.
இதன் பிறகுதான் சபரிமலையின் ஒலி, உலகெங்கும் இன்னும் பிரவாகமெடுத்துப் பரவியது. இன்னும் இன்னுமாக பரவிக்கொண்டிருக்கிறது. இன்னும் மணிகண்ட ஒலியானது… பக்தர்களின் வாயிலாக சரணகோஷங்களாக சப்தமிட்டு, அருள் வழங்கிக் கொண்டே இருக்கும்!
ஆக… சபரிமலையில் ஒளியாகவும் ஜோதியாகவும் திகழ்கிறான் ஐயப்பன். ஒலியாகவும் சப்தமாகவும் அருள்பாலிக்கிறான் சாஸ்தா.
அதனால்தான், கலியுகத் தெய்வம் என்று ஐயப்பனைக் கொண்டாடுகிறோம். கொண்டாடிப் பாடுகிறோம். பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் ஐயனின் திருப்பாதங்களைச் சரணடைகிறோம்.
இந்தத் தொடரைப் படித்த எல்லோருக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் அவர்களின் வம்சத்தார் அனைவருக்கும் அவர்களின் அக்கம்பக்கத்தார், உறவினர்கள், நண்பர்கள் என சகலருக்கும்… எல்லாவற்றுக்கும் மேலாக அகில உலகம் முழுவதும் வாழ்ந்து கொண்டிருக்கிற மக்கள் அனைவருக்கும் ஜோதிசொரூபன், தர்மசாஸ்தா, மணிகண்டப் பிரபு, சபரிகிரிவாசன், ஐயன் ஐயப்ப சுவாமியின் பேரருள் கிடைக்கட்டும். நிம்மதியும் நிறைவுமாக வாழ, ஐயப்ப சுவாமி எப்போதும் துணை நிற்கட்டும்!
 

Leave a Comment