தமிழகத்தில் 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை!

IT Raid: தமிழகத்தில் 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்.

தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரில் உள்ள ஒரு தொகுதி மொத்தம் 40 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தமிழகத்தில் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடும், வேட்பாளர் பட்டியல், தேர்தல் வாக்குறுதி என தீவிரமாக ஈடுபட்டு நிறைவு செய்தது.

இதனைத்தொடர்ந்து,  தங்களது வேட்பாளர்களை ஆதரித்து அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் பரப்புரையில் இறங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. இந்த சூழலில், தமிழ்நாட்டில் இன்று 40 இடங்களில் வருமான வரித்து அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவை தேர்தலை முன்னிட்டு, சென்னை, ஈரோடு, நெல்லை உள்ளிட்ட 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அதன்படி, நெல்லை மாவட்டத்தில் என்.ஜி.ஓ காலனியில், நெடுஞ்சாலைத்துறை அரசு ஒப்பந்ததாரர் ஆர்.எஸ்.முருகன் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதுபோன்று ஈரோடு பழையபாளையத்தில் உள்ள தனியார் ரெடிமிக்ஸ், கட்டுமான நிறுவனத்திலும், சென்னை விருகம்பாக்கம் ரத்னா நகரில் உள்ள ஒரு வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. பணப்பட்டுவாடா தொடர்பான புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்