மாணவர்களுக்கு வருமான சான்றிதழ் மற்றும் சாதி சான்றிதழ் காலதாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும் – அமைச்சர் உத்தரவு..!

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வருமான சான்றிதழ் மற்றும் சாதி சான்றிதழ் காலதாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு வருமானச் சான்றிதழ் மற்றும் சாதிச்சான்றிதழ்களை காலதாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்:

“தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களிடமிருந்து, வருமானச் சான்றிதழ் மற்றும் சாதிச் சான்றிதழ் கோரி பெறப்படும் மனுக்கள் மீது எவ்விதக் கால தாமதமின்றி உடனடியாகப் பரிசீலித்து, அவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்க வட்டாட்சியர்கள் மற்றும் கோட்டாட்சியர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தற்போது, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்துகொண்டு இருப்பதால் நிலுவையில் உள்ள மனுக்களை ஆய்வுசெய்து, மாணவர்களுக்குத் தேவையான சான்றிதழ்கள் உடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும்,அனைத்து இ-சேவை மையங்களிலும் மாணவர்கள் சான்றுகளைக் கூட்ட நெரிசல் இன்றிப் பெற்றுச் செல்ல ஏதுவாகக் குறிப்பிட்ட நாட்களை அதற்கென ஒதுக்கி, எவ்வித இடையூறு இன்றிச் சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும்.

மேலும்,சான்றுகளை வழங்குவதில் தேவையற்ற கால தாமதத்தினைத் தவிர்த்து, குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தவறாது சான்றுகள் வழங்கப்பட வேண்டும் எனவும், தேவையின்றி மாணவர்களை அலைக்கழிக்கக் கூடாது எனவும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.”,என்று தெரிவித்துள்ளது.