இதனை பார்க்கும்போது எனக்கு கம்பீரமும், உற்சாகமும் பிறந்துள்ளது – முதல்வர் முக ஸ்டாலின்

புதிதாக பொறுப்பேற்கும் காவலர்கள், தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவை முன்மாதிரியாக கொள்ள வேண்டும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காவல் துணை கண்காணிப்பாளர்கள் பயிற்சி நிறைவு விழா சென்னை வண்டலூரில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் முக ஸ்டாலின், 40 பெண்கள், 46 ஆண்கள் என 86 டிஎஸ்பிக்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். இதன்பின் இவ்விழாவில் பேசிய முதல்வர், காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டபோது எனக்கு கம்பீரமும், உற்சாகமும் பிறந்துள்ளது. மக்களை காக்கும் மகத்தான பணிக்கு காவலர்கள் தங்களை ஒப்படைக்க வேண்டும்.

அரசாங்கத்தில் உள்ள எத்தனையோ துறைகளில் காவல்துறையும் ஒன்று என நீங்கள் நினைக்கக்கூடாது. அரசிடம் இருந்து மக்கள் முதலில் எதிர்பார்ப்பது அமைதித்தான். அந்த பொறுப்பு காவல்துறைக்கு தான் உள்ளது. அனைத்தையும் மிஞ்சியதாக சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளன. முகமற்ற குற்றாவளிகள் பெருகிவிட்டன. இணையவழி மூலம் பாலியல், நிதி சார்ந்த குற்றங்கள் தற்போது அதிகமாகி வருகிறது.

சைபர் குற்றங்களை தடுக்க நவீன தொழிநுட்பங்களை காவல்துறை தெரிந்துகொள்ள வேண்டும். சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதில் காவல்துறையினர் உறுதியாக இருக்க வேண்டும். குற்றங்களை தடுக்கும் துறையாக காவல்துறை மாறவேண்டும் என்றும் புதிதாக பொறுப்பேற்கும் காவலர்கள், தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவை முன்மாதிரியாக கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், லுங்கி கட்டிக்கொண்டு கழுத்தில் கர்சீஃப் கட்டிக்கொண்டிருந்தால் வழிப்பறி திருடன் என்பதை போல ஒரு காலத்தில் பத்திரிகைகளில் கார்ட்டூன் போடுவார்கள். ஆனால் இப்பொழுது இணைய வசதி வந்தபிறகு அடையாளமற்ற குற்றவாளிகள் பெருகிவிட்டனர். இதனை தடுக்க தமிழக காவல்துறை நவீனமயமாக வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்