“மதுரைக்கு அதிக ஆபத்து;முதல்வர் இதை செய்ய வேண்டும்”- எம்.பி சு.வெங்கடேசன் கோரிக்கை..!

மதுரை மாவட்டத்தின் பசுமையை 33%ஆக அதிகரிக்க முதல்வர் அவர்கள் சிறப்பு திட்டங்கள் அறிவிக்க வேண்டும் என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் மாவட்டம் மதுரை என இந்திய வானிலை துறையின் ஆய்வறிக்கையில் தகவல் தெரிவிப்பதால்,முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை எம்.பி சு.வெங்கடேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக முதல்வர் அவர்களுக்கு ,எம்.பி சு.வெங்கடேசன் அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

மனித வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த காலம்:

“காலநிலை பேரழிவால் வரக்கூடிய பத்தாண்டுகள் மானுடத்திற்கான இருத்தியலை உறுதிசெய்வதற்கான தசாப்பதமாக இருக்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளபடி, மானுட வரலாற்றின் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த காலமாக இந்தக் காலம் இருக்கிறது.

மதுரைக்கு அதிக பாதிப்பு:

இக்காலத்தில் பசுமையான தமிழகத்தை உருவாக்க, சூழலியல் பார்வையில் பல முன்னெடுப்புகளை செய்யும் உங்களுக்கு எனது அன்பான வாழ்த்துகள். மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய வானிலை துறையின் “Observed Rainfall Variability and Changes over Tamil Nadu State” ஆய்வு அறிக்கை வெளிவந்துள்ளது. இவ்வறிக்கையின் படி தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களிலேயே காலநிலை மாற்றங்களால் அதிகம் பாதிக்கப்பட போகிற மாவட்டமாக மதுரை இருப்பது தெரியவருகிறது.

மதுரை மாவட்டத்தின் வருடாந்திர சராசரி மழை பொழிவு கடுமையாக குறைய ஆரம்பித்துள்ளது என்றும், தென்மேற்கு பருவமழை காலகட்டத்தில் மதுரை மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் பெய்கின்ற மழையின் அளவு குறைந்து வருகிறது என்றும் இவ்வறிக்கை கூறுகிறது.

இதில் வருட சராசரி மழை பொழிவு குறிப்பிடத்தக்க அளவு குறைகின்ற தமிழகத்தின் ஒரே மாவட்டம் மதுரையே என்கிறது இந்த ஆய்வு.ஒவ்வொரு மாதமும் பெய்கின்ற மழையின் அளவை கணக்கில் கொண்டு, எல்லா மாதமும் சராசரி மழை பொழிவு குறைந்து வரக்கூடிய மாவட்டமாக மதுரையை சொல்கிறது புவி அறிவியல் துறையின் ஆய்வு. அதுமட்டுமல்லாமல் வறண்ட நாட்களின் (Dry days) எண்ணிக்கையும் மதுரை மாவட்டத்தில் அதிகரிக்கிறது என்றும் தெரிவிக்கிறது.

இவற்றை கணக்கில் கொண்டு, நிகழவிருக்கும் ஆபத்தினை தடுக்க கீழ்கண்ட முன்னெடுப்புகளை செய்வது அவசியமாகிறது.

1. மதுரை மாவட்டத்தின் பசுமை போர்வையை 33%ஆக அதிகரிக்க சிறப்பு திட்டங்கள் அறிவிக்கவேண்டும்.

2. ஏற்கனவே உள்ள காடுகளை வேறு எந்த பயன்பாட்டிற்கும் மாற்றம் செய்யக்கூடாது என்று உத்தரவிட வேண்டும், அக்காடுகளை பாதுகாக்க சிறப்பு திட்டங்களை அறிவிக்க வேண்டும்.

3. மதுரை மாவட்டத்தில் உள்ள எல்லா நீர்நிலைகளையும் போர்க்கால அடிப்படையில் மீட்டுருவாக்கம் செய்து அவற்றை முழுக் கொள்ளளவிற்கு தூர்வார வேண்டும்.

4. வைகையின் பிறப்பிடமான மேற்குமலைகளை பாதுகாக்க தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டும்.

5. வைகை நதியை ஐந்து மாவட்ட நிர்வாக கட்டுப்பாட்டு பகுதியாக இல்லாமல் ஒற்றை அலகு நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர வேண்டும்.

6. மதுரை மாவட்டம் தமிழகத்தின் கலாச்சார தலைநகரம், அதன் சூழலை மீட்டுருவாக்கம் செய்வதற்கும், காற்று மாசை குறைப்பதற்கும் தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென முதல்வர் ஸ்டாலின் அவர்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.”,என்று தெரிவித்துள்ளார்.