தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்திட.. டி.ஆர் பாலு தலைமையில் குழு அமைப்பு..!

கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த திமுகவின் தொகுதி பங்கீடு குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று திமுக, காங்கிரஸ் இடையே முதற்கட்டமாக அதிகாரப்பூர்வமாக தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் தி.மு.க சார்பில் துரைமுருகன், டி.ஆர்.பாலு, கனிமொழி ஆகியோரும் காங்கிரஸ் சார்பில் உம்மன்சாண்டி, ரன்தீப்சிங் சுர்ஜிவாலா, தினேஷ் குண்டுராவ், கே.எஸ்.அழகிரி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், சட்டப்பேரவை தேர்தலுக்காக தொகுதி உடன்பாடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட திமுக சார்பில் திமுக பொருளாளர் டி.ஆர் பாலு தலைமையில் குழு ஓன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் கே.என் நேரு, பெரியசாமி, பொன்முடி, ஆர்எஸ் பாரதி, வேலு, சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

author avatar
murugan