அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பு ஆளுநர் ஒப்புதல்..!

சொத்து குவிப்பு வழக்கில் உயர்கல்வி துறை அமைச்சராக இருந்த பொன்முடி மற்றும் அவரது மனைவி இருவருக்கும் தலா மூன்றாண்டு சிறை  தண்டனையும், தலா 50 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும்,  சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி 30 நாட்களுக்குள் சரணடைய உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் அவகாசம் வழங்கினார்.

பொன்முடிக்கு  மூன்று ஆண்டுகள் சிறை  தண்டனை விதிக்கப்பட்டதால் அமைச்சர், எம்.எல்.ஏ பதவியை பொன்முடி இழந்தார். இதையடுத்து பொன்முடி வகித்து வந்த உயர் கல்வித்துறை யாரிடம் ஒப்படைக்கப்படும் என்று கேள்வி எழுந்த நிலையில், தற்போது பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக உள்ள ராஜ கண்ணப்பனுக்கு கூடுதலாக உயர்கல்வித்துறை இலாக்கா ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதேபோல அமைச்சர் ராஜகண்ணப்பன் வசம் இருந்த காதி மற்றும் கிராம தொழில்கள் துறை தற்போது கைதறித்துறை அமைச்சராக உள்ள ஆர்.காந்திக்கு கூடுதலாக இலாக்கா ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த 2 அமைச்சர்களுக்கு கூடுதல் இலாக்கா வழங்குவது குறித்து ஆளுநருக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.

இந்நிலையில், உயர்கல்வித்துறை கூடுதல் பொறுப்பை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கியதற்கும், ராஜகண்ணப்பன் கவனித்து வந்த காதி மற்றும் கிராம தொழில்கள் துறை கூடுதல் பொறுப்பை ஆர்.காந்திக்கு ஒதுக்கியதற்கும் ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.

author avatar
murugan