பிரெஞ்ச் ஓபன்: அனல் பறக்கும் ஆட்டத்தில் நடால்-நோவக்! இன்று நேருக்குநேர்

பிரெஞ்ச் ஓபன்  டென்னிஸ் இறுதிப்போட்டியில் ஸ்பெயினின்  ரபேல் நடால் மற்றும்  செர்பியாவின் நோவக் ஜோகோவிச்  இன்று  நேருக்குநேர் மோத உள்ளனர்.

தலைநகர் பாரிஸ் நடைபெறும் பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவிற்கான இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான ஸ்பெயினின்  ரபேல் நடாலுடன் உலகின் முதல் நிலை வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும்  இன்று மோதுகின்றனர்.

கொரோனாப்பரவலால் ஒத்தி வைக்கப்பட்ட பிரஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.  ரசிகர்கள் இல்லாத அரங்கில் நடைபெற்று வருகின்றது.இந்நிலையில்  ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டங்கள் முடிவடைந்தது.

முதல் அரையிறுதியில்  செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் (1வது ரேங்க்),  கிரீசின்  ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் (5வது ரேங்க்) மோதினர். முதல் 2  செட்களை 6-3, 6-2 என்ற கணக்கில் எளிதில் கைப்பற்றிய  ஜோகோவிச். அடுத்த 2 செட்களை 5-7, 4-6 என்ற கணக்கில் சிட்சிபாசிடம்  போராடி தோற்றார்.

இதனால் 5வது மற்றும் கடைசி செட் அதிக எதிர்பார்ப்பை எற்றியது. கடைசி செட்டில் அதிரடியாக விளையாடி புள்ளிகளைக் குவித்த   ஜோகோவிச் 6-1 என்ற கணக்கில் எளிதில் கைப்பற்றி அசத்தினார். சுமார் 3மணி 54 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில் 3-2 என்ற செட் கணக்கில் வென்று  ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றார்.

அதே போல 2வது அரையிறுதி போட்டியில் அர்ஜென்டினாவின்  டீகோ ஷ்வார்ட்ஸ்மேன்னுடன் (12வது ரேங்க்), நடப்பு சாம்பியனான ஸ்பெயினின் ரபேல் நடால் (2வது ரேங்க்) மோதினர். முதல் 2 செட்களை 6-3, 6-3 என்ற கணக்கில் அடுத்தடுத்து தன் வசப்படுத்திய  நடால். 3வது செட்டில் டீகோ உறுதியுடன் போராட்டம் நீண்டதால் டை பிரகேகர் ஆனது. டை பிரேக்கரில் தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய நடால் டீகோவை திணறடித்தார்.

அதன்படி நடால் 7-6 (7-0) என்ற கணக்கில்  கைப்பற்றினார். சுமார் 3 மணி 9 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போட்டியை 3-0 என்ற நேர் செட்களில் வென்ற நடால் இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தார்.

இறுதிப் போட்டியில்,   பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை 12 முறை வென்ற நடாலும், ஒரு முறை வென்ற ஜோகோவிச்சும் இன்று நேருக்கு நேர் மோதுகின்றனர்.இந்நிலையில் ஆட்டத்தில் அனல் பறக்கும்  என்றே எதிர்பார்க்கப்படுகிறது.



author avatar
kavitha