தமிழகத்தை தொடர்ந்து மேற்கு வங்காளத்திற்கு அமித் ஷா பயணம்..!

அடுத்த ஆண்டு மேற்கு வங்காளத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று அதிகாலை கொல்கத்தா வந்தார். “குருதேவ் தாகூர், ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் மற்றும் சியாமா பிரசாத் முகர்ஜி போன்ற பெரியவர்களின் இந்த மரியாதைக்குரிய மண்ணிற்கு நான் தலைவணங்குகிறேன்” என்று அமித் ஷா கொல்கத்தா வந்தபிறகு ட்வீட் செய்தார்.

அமித் ஷா வருகைக்கு இரண்டு நாள் முன்பாக சுவேந்து ஆதிகாரி உட்பட பல திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் கட்சியை விட்டு விலகினர், அடுத்த இரண்டு நாட்களில் அவர்கள் பாஜகவில்  இணையுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமித் ஷா தனது இரண்டு நாள் பயணத்தின் போது மேற்கு வங்காளத்தின் இரண்டு மேற்கு மாவட்டங்களான மிட்னாபூர் மற்றும் பிர்பூமில் உரையாற்றவும் பொது பேரணிகளில் கலந்து கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இன்று மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள ராம்கிருஷ்ணா மிஷன் மற்றும் சித்தேஸ்வரி காளி கோயிலுக்கு மத்திய அமைச்சர் வருகை தர திட்டமிட்டுள்ளார். மேலும், மிட்னாபூரில் உள்ள பெலிஜூரி கிராமத்தில் உள்ள ஒரு விவசாயி இல்லத்தில் அமித் ஷா மதிய உணவு சாப்பிடுயுள்ளார்.

பின்னர், அமித் ஷா கொல்கத்தா திரும்புவார், கொல்கத்தாவின் ராஜர்ஹாட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் தனது கட்சி நிர்வாகிகளுடன் சந்திப்பு நடைபெறும் என கூறப்படுகிறது.  அடுத்த ஆண்டு தமிழகத்திலும் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அமித் ஷா இரண்டு நாள் பயணமாக தமிழகத்திற்க்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan