சென்னையை சூழ்ந்த வெள்ளம்:தினக்கூலி அடிப்படையில் பணியாளர்கள் நியமனம் – மாநகராட்சி ஆணையர் உத்தரவு!

சென்னை:மழை பாதிப்பு சீர் செய்யும் பணிகளை மேற்கொள்ள தின கூலி அடிப்படையில் சென்னையில் தற்காலிக பணியாளர்கள் நியமிக்க அம்மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னை மாநகராட்சியில் மழை வெள்ளத்தின் பாதிப்பினை சரிசெய்ய உதவிடும் பொருட்டு அனைத்து மண்டலங்களில் (1 முதல் 15 வரை) உள்ள கோட்டங்களில், சிறப்பு அதிகாரிமன்றம் அவர்களின் அனுமதிக்குட்பட்டு தினக்கூலி அடிப்படையில் தற்காலிகமாக பணியாளர்கள் அமர்த்திட மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும்,மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:”சென்னை மாநகர் பகுதிகளில் 06.11.2021 முதல் பெய்து வரும் கன மழையின் போது ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை போர்கால அடிப்படையில் சரி செய்ய உதவிடும் பொருட்டு, பெருநகர சென்னை மாநகராட்சியின் அனைத்து கோட்டங்களிலும் தற்காலிக பணியாளர்களை பணியில் அமர்த்தி வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை சீர் செய்ய துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு 06.11.2021 அன்று மாண்புமிகு உள்ளாட்சி துறை அமைச்சர் கலந்து கொண்ட ஆய்வு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இந்த தீர்மானத்தின் அடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் அனைத்து கோட்டங்களிலும், கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில், சீர் செய்யும் பணிகளை மேற்கொள்ள மழைக்காலம் முடியும் வரை ஒரு கோட்டத்திற்கு குறைந்த பட்சம் 10 தற்காலிக பணியாளர்கள் வீதம் அந்தந்த மண்டல அலுவலர் அவர்கள் வாயிலாக சுமார் 2500 எண்ணிக்கை அளவில் தற்காலிக பணியாளர்களை பணியில் அமர்த்திடலாம் என கருதப்பட்டு, சென்னை மாவட்ட ஆட்சியர் அவர்களின் செயல்முறை ஆணையின்படி, தற்காலிக பணியாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையான ஒரு நாளைக்கு ரூ.385/- (தினக்கூலி அடிப்படையில்) என்கிற வீதத்தில் சுமார் 2500 எண்ணிக்கையில் தற்காலிக பணியாளர்களை பணியில் அமர்த்திட ஒரு நாளைக்கு ரூ.9,62.500 வீதம் சுமாராக 15 நாளைக்கு (மழைக்காலம் முடியும் வரை) ரூ1,44,37,500/(ரூபாய் ஒரு கோடியே நாற்பத்தி நான்கு இலட்சத்து முப்பத்தேழாயிரத்து ஐநூறு மட்டும்) செலவினம் ஏற்படும் என உத்தேசிக்கப்பட்டுள்ளது.

எனவே,06.11.2021 முதல் பெய்து வரும் கனமழை காரணமாக பெருநகர சென்னை மாநகராட்சியின் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை சீர் செய்யும் பணிகளை மேற்கொள்ள உதவிட மழைக்காலம் முடியும் வரை ஒரு கோட்டத்திற்கு குறைந்த பட்சம் 10 தற்காலிக பணியாளர்கள் வீதம் (தினக்கூலி அடிப்படையில்) ஒப்பந்த அடிப்படையில் அல்லாமல் போர்கால நடவடிக்கை முடியும் வரை, அந்தந்த மண்டல அலுவலர் அவர்கள் வாயிலாக சிறப்பு அதிகாரி மன்றத்தின் பின்னேற்புக்குட்பட்டு பின்வரும் இனங்களின்படி பணியில் அமர்த்திட ஆணையிடப்படுகிறது”,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.