#Flash:ஓபிஎஸ்-இபிஎஸ் அவசர முறையீடு – உயர்நீதிமன்றம் விசாரணை!

அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றதற்கு இடையில்,அதிமுக தலைமை அலுவலகம் அருகே இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது.இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.

இதனிடையே,அதிமுக தலைமை அலுவலகத்துக்குள் ஓபிஎஸ் அவரது ஆதரவாளர்களுடன் அத்துமீறி நுழைந்ததாக இபிஎஸ் தரப்பில் புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் ராயப்பேட்டை காவல்நிலையத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.இதனால்,பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இதனையடுத்து,அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட சீலை அகற்ற உத்தரவிடக்கோரி இபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து,அதிமுக அலுவலக சீலை அகற்றும் முறையீட்டை ஜூலை 13 ஆம் தேதி விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது.

இதனை தொடர்ந்து,அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்த விவகாரத்தில் ஓபிஎஸ் தரப்பும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர். வருவாய் கோட்டாட்சியர் உத்தரவை ரத்து செய்து,சீலை அகற்ற உத்தரவிடக்கோரியும்,உண்மையான அதிமுக தாங்கள் தான் என்றும் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு தகவல் அளித்துள்ள நிலையில்,மனுத்தாக்கல் நடைமுறை முடிந்தால் ஜூலை 13 ஆம் தேதி விசாரிப்பதாக உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில்,அதிமுக அலுவலக சீலை அகற்றும் இபிஎஸ்-ஓபிஎஸ் முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்கவுள்ளது. அதன்பின்னரே,அதிமுக அலுவலகத்தின் சீல் அகற்றப்படுமா? என்பது தெரிய வரும்.

 

Leave a Comment