தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபடியே மயங்கி விழுந்து உயிரிழந்த பெண் காவலர்!

சென்னையில் தொலைபேசியில் பேசிக்கொண்டு இருந்தபடியே மயங்கி விழுந்த பெண் காவலர்.

சென்னை தாம்பரத்தை அடுத்த பீர்க்கன்கரணை கருமாரியம்மன் கோவில் இரண்டாவது தெரு நடுங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் தான் ஆயுதப்படை காவலர் சத்தியலட்சுமி. இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு காவல் துறையில் சேர்ந்து இரண்டாம் நிலை காவலராக பீர்க்கன்கரணை காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவரது கணவர் என்.எஸ்.ஜி கமாண்டோ பயிற்சி மையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார், இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் ஆயுதப்படை காவலர் சத்தியலட்சுமி நேற்று காலை பணிக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்த பொழுது தொலைபேசி அழைப்பு வந்ததாக கூறப்படுகிறது.அந்த தொலைபேசி அழைப்பில் பேசிக்கொண்டிருந்த அவர் வீட்டிலேயே திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு வண்டலூர் கேளம்பாக்கம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். பின் உடலை வீட்டிற்கு கொண்டு வந்த உறவினர்கள் பீர்க்கன்காரணை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பெண் காவலர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பீர்க்கங்கரணை போலீசார் இது தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

author avatar
Rebekal