தொடரும் விவசாயிகள் போராட்டம் ! இன்று மீண்டும் பேச்சுவார்த்தை

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இன்று ( டிசம்பர் 5 ஆம் தேதி )விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் பஞ்சாப்-ஹரியானா  விவசாயிகள் போராட்டம் கடந்த 9 நாட்களாக நடைபெற்று வருகிறது.இதன் தீவிரத்தை உணர்ந்த மத்திய அரசு ,டிசம்பர் 3-ஆம் தேதிக்கு முன்பாக பேச்சுவார்த்தைக்கு தயார் என்று அறிவித்தது.குறிப்பாக பேச்சுவார்த்தைக்கு முன்னர் விவசாய அமைப்புகள் அரசு கூறும் இடத்திற்கு போராட்டத்தை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வைத்தது அரசு. இதன்படி மாற்றிக்கொண்டால் பின்னர் விவசாயிகளுடன் அரசு பேச்சுவார்த்தை மேற்கொள்ளும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருந்தார்.நிபந்தனையுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்திருந்த நிலையில் அதனை புறக்கணிப்பதாக சுமார் 30-க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் அறிவித்தது.

ஆகவே முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்தது.அதாவது நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைத்தது.அதன்படி  30 க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் விக்யான் பவனில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். 3 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த கூட்டம் எந்த ஒரு இறுதி முடிவும் எட்டப்படாமல் முடிவடைந்தது.மற்றொரு சுற்று பேச்சுவார்த்தை டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெற்றது.இதிலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

ஆகவே இன்று ( டிசம்பர் 5 ஆம் தேதி )விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும், அதில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொள்ள உள்ளதாகவும் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். முன்னதாக விவசாய சங்கங்கள் தீவிரமாக ஆலோசனை பெற்று வந்த நிலையில், 8 ஆம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்த டெல்லியில் விவசாயிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.