அக்னிபத் திட்டத்தை கொண்டு தீயுடன் விளையாடாதீர்கள் – ராகுல் காந்தி

நாட்டின் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் குரலைக் கேளுங்கள் ராகுல் காந்தி ட்வீட்.

இந்திய பாதுகாப்புத் துறையில் அக்னி வீர் என்ற புதிய வேலைவாய்ப்பு துறையை உருவாக்கி உள்ளது மத்திய அரசு. அதன்படி, முப்படைகளில் இளைஞா்கள் தற்காலிகமாகப் பணி செய்வதற்கு ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் அறிமுகம் செய்திருந்தார். இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் “அக்னி வீர் ” எனப்படும் வீரர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர்.

இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 45 ஆயிரம் பேர் பணி அமர்த்தப்பட உள்ள நிலையில், இதற்கு வயது வரம்பு 17.5 – 21 வயது வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. 4 வருட பணியில் 6 மாதம் இவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என்றும் கூறியிருந்தனர்.

பீகார், உத்தரபிரதேசம், ஹரியானா மாநிலங்களில் ராணுவ பணியில் சேர பயிற்சி பெற்று வருபவர்கள் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சாலைகளில் டயர்களை கொளுத்தியும், பேருந்துகளை அடித்து நொறுக்கியும் இளைஞர்கள் ஆவேச நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பதவி இல்லை, ஓய்வூதியம் இல்லை, 2 ஆண்டுகளாக நேரடி ஆட்சேர்ப்பு இல்லை, 4 ஆண்டுகளுக்குப் பிறகு நிலையான எதிர்காலம் இல்லை, இராணுவத்திற்கு மரியாதை இல்லை, நாட்டின் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் குரலைக் கேளுங்கள்.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment