மு.க.அழகிரியை புறந்தள்ளி விட்டு திமுக ஆளும் கட்சியாக வர முடியாது -அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

ஜனவரி 3-ஆம் தேதி அன்று அழகிரி ஆலோசனை நடத்த உள்ள நிலையில் , அவர் கட்சி தொடங்குவது திமுகவிற்கு பெரிய பாதிப்பாக இருக்கும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு  தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,வருங்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறேன் என்று மு.க.அழகிரி அறிவித்தார்.இந்த ஆலோசனைக் கூட்டம் ஜனவரி 3-ஆம் தேதி அன்று மாலை 4 மணியளவில் மதுரை பாண்டிக்கோவில் அருகே உள்ள துவாரகா பேலசில் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள என் ஆதரவாளர்கள்  தவறாது பங்கேற்குமாறு அன்புடன் வேண்டுகிறேன் என்று அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில் இன்று அமைச்சர் செல்லூர் ராஜு  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், அழகிரியின் செயல்பாடு மதுரையில் உள்ள அனைவருக்கும் தெரியும்.கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக இங்கே வசித்து வருகிறார்.அவர் எடுத்த கொள்கையில் மாறாத நிலைப்பாட்டை உடையவர்.எந்த ஒரு செயலாக இருந்தாலும் முறையாக திட்டம் வகுத்து ,செயல்படுத்தக்கூடியவர்.அவரை இன்று திமுக புறக்கணிக்கிறது. கலைஞரிடம் இருந்த அத்தனை திறமையும் ,அழகிரியிடம் உள்ளது.அதை நாங்கள் பார்த்தவர்கள்.இன்னும் சொல்லப்போனால் பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள்.எதிர்க்கட்சியை எந்த அளவிற்கு வளர விடக்கூடாது என்பதற்கு அவரது தந்தை போல செயல்பட்டவர். அவரை புறந்தள்ளி விட்டு திமுக ஆளும் கட்சியாக வர முடியாது.அவர் கட்சி தொடங்குவது திமுகவிற்கு பெரிய பாதிப்பாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.