தேவேந்திர குல வேளாளர் பரிந்துரை ! 30 நாட்களுக்குள் தீர்வு -முதலமைச்சர் பழனிசாமி ட்வீட்

தேவேந்திர குல வேளாளர் என்ற ஒரே பொதுப்பெயரில் அறிவிக்க கோரிய பரிந்துரைக்கான தீர்வு 30 நாட்களுக்குள் கிடைக்கும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பட்டியல் இனத்தில் உள்ள தேவேந்திரகுலத்தான், கடையன், காலாடி, குடும்பன், பள்ளன், பண்ணாடி, வாதிரியான் ஆகிய சாதிகளை உள்ளடக்கி தேவேந்திர குல வேளாளர் ஒரே பொதுப் பெயரில் பெயரிட வேண்டும் என்ற கோரிக்கை  இருந்து வந்தது. இது தொடர்பான போராட்டங்களும் நடைபெற்று வந்தன.

ஆகவே அண்மையில் முதலமைச்சர் பழனிசாமி ,  தேவேந்திரகுலத்தான், கடையன், காலாடி, குடும்பன், பள்ளன், பண்ணாடி, வாதிரியான் ஆகிய 7 உட்பிரிவுகளுக்கு பொதுப்பெயரிடுவது குறித்து அமைக்கப்பட்ட ஆய்வுக்குழுவின் பரிந்துரைகளை ஏற்று “தேவேந்திர குல வேளாளர் என பொதுப் பெயரிட” மத்திய அரசுக்கு மாநில அரசு பரிந்துரைக்கும் என்று தெரிவித்தார்.மேலும்  அவர் கூறுகையில்,தேவேந்திர குல வேளாளர் என பொதுப்பெயரிட்டாலும் 7பிரிவினரின் தற்போதைய சமூக, பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு பட்டியல் வகுப்பில் தொடர ஆய்வுக்குழு பரிந்துரைத்துள்ளது. இப்பிரிவினர் ஏற்கனவே பெற்று வரும் சலுகைகள் தொடரும். இதற்கான ஆணைகளை மாண்புமிகு அம்மாவின் அரசு விரைவில் பிறப்பிக்கும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், 7 உட்பிரிவுகளை உள்ளடக்கி தேவேந்திர குல வேளாளர் என்ற ஒரே பொதுப்பெயரில் அறிவிக்க கோரிய பரிந்துரை மத்திய அரசிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 30 நாட்களுக்குள் இதற்கான தீர்வு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.