சர்ச்சை பேச்சு ! மத்திய இணை அமைச்சர்,பாஜக எம்.பி. பிரசாரங்களில் ஈடுபட தடை

சர்ச்சை பேச்சு தொடர்பாக மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் 3 நாட்களுக்கும், எம்.பி., பர்வேஸ் வர்மா 4 நாட்களுக்கும் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட தடை விதித்தது தேர்தல் ஆணையம்.

டெல்லி  சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி பிப்ரவரி 8-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது .பிப்ரவரி 11-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.எனவே ஆம் ஆத்மி,பாஜக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.தற்போது தேர்தல் பிரச்சாரங்கள் தலைநகர் டெல்லியில் தீவிரமைடைந்து உள்ளது.பாஜக,காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய  தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் தான் மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாகூர் பிரச்சார கூட்டத்தில் பேசியது சர்ச்சையாக மாறியது.டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் அனுராக் தாகூர் பேசுகையில், நாட்டின் துரோகிகளை சுட்டு வீழ்த்துங்கள் என்று பேசினார்.மத்திய அமைச்சார் இவ்வாறு பேசியது பெரும் சர்ச்சையாக மாறியது.ஆனால் அனுராக் தாகூரை போலவே பாஜக எம்.பி. பர்வேஷ் வர்மா பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.அதாவது, தேர்தல் பிரசாரத்தில் அவர் பேசுகையில், காஷ்மீரில் உள்ள பண்டிட்டுகளுக்கு என்ன நடந்ததோ, அது டெல்லியிலும் நடக்கும் .பாஜக  வெற்றி பெற்ற இரவே ஷாகீன் பாக் இடம் காலி செய்யப்படும். ஷாகீன்பாக்கில் கூடியுள்ளவர்கள், உங்கள் வீடுகளுக்குள் புகுந்து, உங்களது மகள்களையும், சகோதரிகளையும் பலாத்காரம் செய்து கொலை செய்துவிடுவார்கள்.பாஜக  ஆட்சிக்கு வந்தால் அரசு நிலங்களில் உள்ள மசூதிகள்  அனைத்தும் இடிக்கப்படும் என்று பேசினார்.இவர் மதம் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

எனவே தேர்தல் ஆணையம்,சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசிய மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் பாஜக எம்.பி பர்வேஷ் வர்மா ஆகியோரை நட்சத்திர வேட்பாளர்கள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என்று பாஜகவிற்கு உத்தரவு பிறப்பித்தது.இந்நிலையில்  மத்திய இணை அமைச்சர் அனுராக் தாகூர், பாஜக எம்.பி. பர்வேஷ் வர்மா தேர்தல் பிரசாரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.அனுராக் தாகூர் 72 மணிநேரமும் ,பர்வேஷ் வர்மா 96 மணிநேரமும் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.