#Breaking:ரயில் நிலைய கொள்ளை…திடீர் திர்ப்பம் – போலீசார் அதிரடி!

சென்னை:திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலைய கவுன்டரில் இருந்து ரூ.1.32 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துவிட்டு நாடகமாடிய ஊழியர் டீக்காரம் மற்றும் அவரது மனைவியை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலைய கவுன்டரில் நேற்று ஊழியர் டீக்காரம் என்பவர் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது,அதிகாலை நேரம் என்பதால் பயணிகள் வரத்து இல்லாத சமயத்தில் அடையாளம் தெரியாத சிலர் முன்பதிவு கவுன்டருக்குள் நுழைந்து துப்பாக்கி முனையில் ஊழியரை கட்டி வைத்துவிட்டு கவுன்டரில் இருந்து ரூ.1.32 லட்சம் ரொக்கத்தை கொள்ளை அடித்து சென்றதாக கூறப்பட்டது.

இதனையடுத்து,இந்த கொள்ளை சம்பவம் குறித்து,ரயில்வே போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.மேலும், சம்பவ இடத்தில் சிசிடிவி கேமரா ஏதும் இல்லாததால் கொள்ளையர்களை அடையாளம் காண்பதில் சிறிது சிக்கலும் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில்,இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக,பறக்கும் ரயில் நிலைய டிக்கெட் கவுன்டரில் இருந்து ரூ.1.32 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்து விட்டு நாடகமாடிய ஊழியர் டீக்காரம் கைது செய்யப்பட்டுள்ளார்.சம்பவ இடத்தில் சிசிடிவி கேமரா ஏதும் இல்லாததால் ரயில் நிலையத்தின் அருகில் உள்ள சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்த போது,கொள்ளை நடைபெற்ற குறிப்பிட்ட நேரத்திற்குள் பெண் ஒருவர் வந்து செல்ல கூடிய காட்சி இடம் பெற்றது.

இதனைத் தொடர்ந்து,சந்தேகத்தின் பேரில் அந்த பெண் யார் என்று போலீசார் விசாரணை மேற்கொண்டார்கள்.அப்போது,அவர் டிக்கெட் கவுன்டர் ஊழியர் டீக்காரம் மனைவி என்பது தெரிய வந்தது.உடனே அவரது வீட்டிற்கு சென்று அவரது மனைவியை பிடித்து போலீசார் விசாரிக்கும்போது தான்,தனது மனைவியுடன் சேர்ந்து டிக்கெட் கவுன்டர் ஊழியர் டீக்காரம் கொள்ளை நாடகம் ஆடியது போலீசார் விசாரணையில் அம்பலமாகியது.

இதன்காரணமாக,கொள்ளையடித்துவிட்டு நாடகமாடிய ஊழியர் டீக்காரம் மற்றும் அவரது மனைவியை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர். மேலும்,கொள்ளைப்போன ரூ.1.32 லட்சம் ரொக்கத்தை அவர்களிடமிருந்து போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இதனையடுத்து,இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.குறிப்பாக,இந்த கொள்ளை சம்பவத்தில் வேறு யாரேனும் அவர்களுடன் தொடர்பில் உள்ளார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.