அரசியலமைப்பு சட்டத்திற்கு ஆபத்து.. 2024ல் நல்ல தீர்ப்பு – முதல்வர் மு.க.ஸ்டாலின் மடல்..

திமுகவின் இளைஞரணி மாநாடு டிசம்பர் 17ஆம் தேதி சேலத்தில் பிரமாண்ட நடைபெற உள்ளது. திமுகவில் இளைஞரணி உருவாக்கப்பட்ட பிறகு கடந்த 2007-ஆம் ஆண்டு டிசம்பர் 15-ஆம் தேதி முதன் முதலாக திமுக இளைஞரணி சார்பில் மாநாடு நடைபெற்றது. அதன் பிறகு தற்போது 2வது முறையாக டிசம்பர் 17ஆம் திமுக இளைஞரணி சார்பில் மாநாடு நடைபெற உள்ளது.

இந்த மாநாடு குறித்த பிரச்சாரத்தை ஏற்படுத்த பைக் பேரணியை நேற்று முன்தினம் கன்னியாகுமரியில் திமுக இளைஞரணி தலைவர், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் துவங்கி வைத்தார். கன்னியாகுமரியில் தொடங்கியுள்ள பைக் பேரணியானது 234 தொகுதிகளுக்கும் 13 நாட்களில் சென்றையடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாக, மாநில உரிமைகளை மத்திய அரசிடமும் மீட்க வேண்டும் என்றும், திமுக செயல்படுத்தியுள்ள திட்டங்கள் குறித்து மக்களிடம் விளக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், திமுக இளைஞரணி மாநாட்டுக்கு வாழ்த்து தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார். அதில், திரைப்படக் காட்சியில் கண்ட எழுச்சியையும், உணர்ச்சியையும் திமுக இளைஞரணியின் இருசக்கர வாகனப் பேரணி ஜனநாயகக் களத்தில் உருவாக்கியுள்ளது.

குண்டர் சட்டத்தில் விவசாயிகள் கைது… அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு!

முக்கடல் தாலாட்டும் கன்னியாகுமரியில் கலைஞர் நிறுவிய வானுயர அய்யன் திருவள்ளுவர் சிலை வாழ்த்துவது போல, அண்ணல் காந்தியடிகள் மண்டபத்தின் அருகிலிருந்து உரிமைப் போர் முழக்கத்துடன் இந்த இரு சக்கர வாகனப் பேரணியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்திருக்கிறார். உத்தமர் காந்தியைக் கொன்ற கொடியவன் கோட்சே தூக்கிலிடப்பட்ட நாளில், கோட்சே வாரிசுகளின் அரசியல் அதிகார அராஜகத்தை எதிர்த்து, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் கொள்கை வாரிசுகளான நம் கழக உடன்பிறப்புகள் இருசக்கர வாகனத்தில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

சேலத்தில் டிச.17ம் தேதி இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு – மாநில உரிமை மீட்பு மாநாடாக எழுச்சிமிக்க இளையோரின் புதுப் பாய்ச்சலுடன் நடைபெறவிருக்கிறது. இளைஞர்கள், மாணவர்கள் பங்கேற்பில் திமுகவை உருவாக்கி 30 ஆண்டுகள் கடந்த நிலையில், புதிய இளைஞர்களால் இயக்கத்திற்குப் புது ரத்தம் பாய்ச்சும் வகையில்தான் 1980-ஆம் ஆண்டு ஜூலை 20ம் நாள் மதுரை ஜான்சிராணி பூங்காவில் கழகத்தின் இளைஞரணியைத் தலைவர் கலைஞர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.

டிக்கெட் மறுவிற்பனை… மாட்டிக்கொண்ட நடத்துனர்.! சிக்கியது எப்படி.?

தலைவர் கலைஞர் ஆணையிட்டால் ஏவுகணை போல எதிரிக் கூட்டம் நோக்கிப் பாயும் பட்டாளமாக இளைஞரணி செயல்பட்டது. எத்தனையெத்தனை நினைவுகளோ நெஞ்சத்தில் சுழல்கின்றன. தான் வளர்த்த பிள்ளை, தன் தோளுக்கு மேல் வளர்ந்து, தானே தன் கடமைகளை முனைப்புடனும் சிறப்புடனும் நிறைவேற்றும் ஆற்றலைப் பார்த்து மகிழும் தாயின் மனநிலையுடன், தம்பி உதயநிதியையும் அவர் தலைமையிலான இளைஞரணியில் உள்ள ஒவ்வொருவரின் செயலாற்றலையும் கண்டு மகிழ்கிறேன்.

அரசியல் மாண்புகளையோ மாநில உரிமைகளையோ மதிக்காத மத்திய ஆட்சியாளர்களால் இந்திய அரசியலமைப்புச் சட்டமே ஆபத்துக்குள்ளாகியிருக்கிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்புகளையும் கூட மதிக்காத நியமனப் பதவிக்காரர்களின் அடாவடிகள் கூட்டாட்சித் தத்துவத்தைச் சிதைக்கின்றன. மதவாத – மொழி ஆதிக்க – மானுட விரோத அரசியல் ஒவ்வொரு மாநில மக்களையும் நடுங்கச் செய்கிறது. இவை எல்லாவற்றுக்கும் எதிரான நல்ல தீர்ப்பை 2024-ஆம் ஆண்டில் மக்கள் எழுதப் போகிறார்கள்.

அதற்கான விழிப்புணர்வுப் பரப்புரைதான் இளைஞரணி மேற்கொண்டிருக்கும் இரு சக்கர வாகனப் பேரணி. கருப்பு-சிவப்பு இளைஞர் படை மக்களிடம் செல்லட்டும். மாநில உரிமைகள் பறிக்கப்படுவதால் நீட் தேர்வு போன்ற கொடூரங்கள் எத்தனை உயிர்களைப் பறித்துள்ளன என்பதை எடுத்துச் சொல்லட்டும். நீட் விலக்கிற்கான அரைக் கோடி கையெழுத்துகளைப் பெறட்டும். ஜனநாயகப் போர்க்களத்தில் வெல்லட்டும் என தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்