பெங்களூரில் 1200 -க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!

பெங்களூரில் முன்கள பணியாளர்களாக சேவை செய்யக்கூடிய ஆயிரத்து இருநூறுக்கும் மேற்பட்ட காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தொடந்து தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. தினமும் லட்சக்கணக்கானோர் புதிதாக பாதிக்கப்படுவதுடன் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக முன்கள பணியாளர்களாக பணியாற்றக்கூடிய காவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்களுக்கு கொரோனாவின் தாக்கம் மிக அதிக அளவிலேயே காணப்படுகிறது.

பெங்களூரிலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. தற்போது வரை பெங்களூரில் சுமார் 1,221 காவலர்கள் கொரோனாவால்  பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயம் 11 காவலர்கள் கொரோனாவின் இரண்டாம் அலையில் பெங்களூரில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது பெங்களூரில் உயிரிழந்தவர்கள் மற்றும் குணமாகியவர்கள் தவிர்த்து 803 காவலர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள காவலர்கள் பலருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

author avatar
Rebekal