ஆளுநரை வைத்து அரசாங்கம் நடத்த நினைக்கிறார்கள்… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம்!

திமுக கட்சியின் இரண்டாவது இளைஞரணி மாநாடு வரும் 21ம் தேதி சேலத்தில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இளைஞரணி மாநாட்டிற்கான சுடர் ஓட்டத்தை இன்று சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிலையில், திமுக இளைஞரணி மாநாட்டை முன்னிட்டு, திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், கழக தலைவர் என்ற பொறுப்பைச் சுமந்திருக்கும் உங்களில் ஒருவனான என்னை உங்கள் அனைவரிடமும் அடையாளப்படுத்தியது இளைஞரணிதான். 1982-ஆம் ஆண்டு முதல் இளைஞரணியை வழிநடத்தி, தலைவர் கலைஞரின் நம்பிக்கையைப் பெற்றேன். தற்போது, அமைச்சரும், இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டு, மாநாட்டிற்கான ஏற்பாடுகளை  செய்து வருகிறார்.

2007-ஆம் ஆண்டு நெல்லையில் இளைஞரணியின் முதல் மாநில மாநாடு சிறப்பாக நடைபெற்றது. இப்போதும் அந்த வழிமுறைப்படி, 2024 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் சூழலில், சேலத்தில் நடைபெறும் இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற உள்ளது. இது கூடிக் கலையும் நிகழ்வல்ல, கொள்கையைக் கூர் தீட்டும் உலைக்களம், மாநில உரிமை முழக்கத்தை முன்னெடுக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாடு.

எனவே, பன்முகக்தன்மை கொண்ட இந்திய ஒன்றியம் வலிமையாக இருக்க வேண்டுமென்றால், மாநிலங்களுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதே மாநில சுயாட்சிக் கொள்கையின் நோக்கம். அது நிறைவேற்றப்பட்டால்தான், உண்மையான கூட்டாட்சி வலிமையுடன் செயல்பட முடியும். பத்தாண்டுகால மத்திய பாஜக ஆட்சியில் மாநிலங்களின் உரிமைகள் பலவும் பறிபோய்விட்டன.

டிசம்பர் 20, 21..! திமுக இளைஞரணி மாநாடு நிகழ்ச்சி நிரல்கள் என்னென்ன.? உதயநிதி விளக்கம்…

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குப் போட்டியாக, நியமனப் பதவியில் உள்ள ஆளுநர்களை வைத்து அரசாங்கத்தை நடத்த நினைப்பது மாநிலங்களுக்கு எதிரானது மட்டுமல்ல, இந்திய அரசியல் சட்டத்திற்கே எதிரானதாகும். ஆளுநர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட உயர்ந்த பொறுப்புக்குச் சிறிதும் தகுதியில்லாதவர்களாக, மலிவான – தரம்தாழ்ந்த அரசியல் செய்யும் அவலத்தை இந்தியா இப்போதுதான் காண்கிறது.

திருவள்ளுவரில் தொடங்கி தெருவில் நடந்து போவோர் வரை எல்லார் மீதும் காவிச் சாயம் பூசுவது என்பதை மத்திய ஆட்சியாளர்களே முன்னின்று செய்கின்ற மூர்க்கத்தனமான அரசியலை ஜனநாயக வழியில் முறியடிக்கும் வலிமை திமுகவுக்கு உண்டு. அதை அனைத்து மாநிலங்களிலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசர – அவசிய தேவை இருக்கிறது என்பதை உணர்த்தக்கூடிய அளவில் சேலத்தில் இளைஞரணி மாநாடு நடைபெறவிருக்கிறது.

நான் வளர்த்து ஆளாக்கிய அணியின் இரண்டாவது மாநில மாநாட்டில் பங்கேற்பதில் ஒரு தாயின் உணர்வுடன் பெருமிதம் கொள்கிறேன். நாடாளுமன்றத் தேர்தலும் நெருங்கி வருகிறது. ஜனநாயகத்தின் அடர்ந்த இருண்ட காலத்திலிருந்து இந்தியாவை மீட்டெடுத்து, மீண்டும் ஒரு விடுதலை வெளிச்சம் நிறைந்த காலத்தினை மக்கள் காண்பதற்கு இந்தியா கூட்டணியின் முன்னெடுப்புகள் தொடங்கியுள்ளன.

இந்தப் பொருத்தமான சூழலில்தான், மாநில உரிமை மீட்பு முழக்கத்தினை மையமாகக் கொண்டு இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறுகிறது. தம்பி உதயநிதி அழைக்கிறார். சேலத்தில் நடைபெறும் இளைஞரணி மாநாட்டில் திரண்டிடுவீர். கடல் இல்லா சேலம் மாவட்டம், கருப்பு – சிவப்புக் கடல் ஆகட்டும். இந்தியாவின் ஒளிமிகுந்த புது வரலாற்றை இளைஞரணி படைக்கட்டும் என தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்