#Breaking:காவல்துறையினருக்கு ரூ.5,000 ஊக்கத்தொகை;ரூ.58.59 கோடி நிதி ஒதுக்கீடு – முதல்வர் அறிவிப்பு….!

காவல்துறையினருக்கு ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்க ரூ.58.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கொரோனா தொற்று காலத்தில் களப்பணியாற்றி வரும் 1,17,184 காவல் துறையினர் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்க ரூ.58.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.

மேலும் இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்:

“தமிழ்நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், களப்பணியாற்றி வரும் காவல் துறையினர் தங்களது இன்னுயிரையும் பொருட்படுத்தாது கடமையாற்றி வருகின்றனர்.அவர்களது தன்னலமற்ற பணியினை அங்கீகரிக்கும் விதமாகவும், ஊக்கப்படுத்தும் விதமாகவும், தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றி வரும் இரண்டாம் நிலைக் காவலர் முதல் ஆய்வாளர் வரையிலான 1 இலட்சத்து 17 ஆயிரத்து 184 காவல் துறையினருக்கு, ரூபாய் 5 ஆயிரம் வீதம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஏற்கனவே அறிவித்திருந்தார்கள்.

அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதமாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (18.6.2021) 58 கோடியே 59 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்கள். இதன் மூலம், காவல் துறையைச் சார்ந்த இரண்டாம் நிலைக் காவலர் முதல் காவல் ஆய்வாளர் வரையிலான 1 இலட்சத்து 17 ஆயிரத்து 184 காவல்துறை பணியாளர்கள், தலா 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை பெறுவார்கள்”,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.