கனமழையால் பாதிக்கப்பட்ட கன்னியாக்குமரி மாவட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை -முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

கனமழையால் பாதிக்கப்பட்ட கன்னியாக்குமரி மாவட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

யாஸ் புயல் எதிரொலியால்,கடந்த சில நாட்களாக கன்னியாகுமரியில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வந்தது.அதனால்,கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது.

இதனையடுத்து,குமரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக,மொத்தம் 238 கூரை வீடுகள் மற்றும் 35 ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் சேதமடைந்துள்ளன. அதுமட்டுமல்லாமல்,373 ஹெக்டேரில் பயிரிடப்பட்ட வேளாண், தோட்டக்கலை பயிர்கள் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது என முதல் நிலை அறிக்கை கூறுகிறது. இதன்காரணமாக,பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வசித்த 767 நபர்கள் 16 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உணவு, மருத்துவ வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ்,நிவாரணம் அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி,

  • பாதி சேதமடைந்த கூரை வீடுகளுக்கு – ரூ.4,100,
  • முழுமையாக சேதமடைந்த கூரை வீட்டுக்கு – ரூ.5,000
  • மானாவாரி, நீர்ப்பாசன வசதி பெற்ற இதர பயிர்களுக்கும் இடுபொருள் நிவாரணத் தொகை ஹெக்டேருக்கு – ரூ.20,000
  • மானாவரி நெற்பயிர் தவிர அனைத்து மானாவரி பயிர்களுக்கும் இடுபொருள் நிவாரணத் தொகையாக ஹெக்டேர் ஒன்றுக்கு – ரூ.10,000
  • பல்லாண்டு கால பயிர்களுக்கு (perennial crops) இடுபொருள் நிவாரணத் தொகையாக ஹெக்டேர் ஒன்றுக்கு -ரூ.25,000 வழங்கப்படும்.

இதனைத்தொடர்ந்து,நிவாரணத் தொகையை தாமதமின்றி மக்களுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.