சண்டிகர் மேயர் தேர்தல் – ஐகோர்ட்டில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் வழக்கு!

சண்டிகரில் நடைபெற்ற மேயர் தேர்தலில் மோசடி நடைபெற்றுள்ளது என்று ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். சண்டிகரில் இன்று காலை மேயர் தேர்தல் நடைபெற்றது. இதில், பாஜகவை எதிர்த்து இந்தியா கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் களமிறங்கின.

மொத்தம் 35 உறுப்பினர்களைக் கொண்ட சண்டிகர் மாநகராட்சியில், பாஜக 16 வாக்குகளையும், இந்தியா கூட்டணி 12 வாக்குகளையும் பெற்றன. இதில், 8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு, பாஜகவின் மனோஜ் சோங்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேயர் தேர்தலில், பாஜக முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், உரிய தேர்தல் நடைமுறையை பின்பற்றவில்லை எனவும் இந்தியா கூட்டணி கட்சிகளான ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் கடுமையாக குற்றச்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதாக அறிவித்ததை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்காக பாஜக எந்த நிலைக்கும் செல்லலாம்… ஆம் ஆத்மி கடும் குற்றச்சாட்டு!

இதுபோன்று, பாஜக வெற்றியை எதிர்த்து பஞ்சாப் – ஹரியானா ஐகோர்ட்டில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கூட்டணி வேட்பாளர் குலதீப்குமார் வழக்கு தொடர்ந்துள்ளார். நாளை வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிமன்றம் உறுதி அளித்துள்ளது.

இதனிடையே, காங்கிரஸ், ஆம் ஆத்மியின் 8 வாக்கு சீட்டுகளில் திருத்தம் செய்து தேர்தல் அதிகாரி செல்லதாகிவிட்டார் என குற்றசாட்டியுள்ளனர். காங்கிரஸும், ஆம் ஆத்மியும் 20 வாக்குகளுடன் முன்னிலையில் இருந்த நிலையில், 8 வாக்குகள் செல்லாது என அறிவித்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

அதாவது, திட்டமிட்டே வாக்கு சீட்டுகளில் தேர்தல் அலுவலர் திருத்தம் செய்து செல்லாது என அறிவித்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சண்டிகர் மேயர் தேர்தலின்போது வாக்குசீட்டுகளில் தேர்தல் அதிகாரி அமித் பாண்டே, திருத்தம் செய்வது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment