பிரதமர் ரோடு ஷோவில் விதிமீறல்… வழக்குப்பதிவு செய்த காவல்துறை!

PM Modi: சென்னையில் நடைபெற்ற பிரதமர் மோடியின் ரோடு ஷோவில் விதிமீறல் நடந்ததாக வழக்குப்பதிவு.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளுக்கு வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் பாஜக ஆகிய பிரதான கட்சி தலைவர்கள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில், தமிழகத்தில் பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள நேற்று முன்தினம் 2 நாள் பயணமாக பிரதமர் மோடி சென்னை வந்தடைந்தார். சென்னை வந்த பிரதமர் மோடி அன்று மாலை பனகல் பூங்கா முதல் பாண்டி பஜார் வழியாக தேனாம்பேட்டை சிக்னல் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வாகன பேரணியில் கலந்துகொண்டு அங்கு போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

அதன்படி, பாஜகவின் தென்சென்னை வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ் பி செல்வம், வடசென்னை வேட்பாளர் பால் கனகராஜ் உள்ளிட்டோருக்கு ஆதரவாக வாகன பேரணி நடத்தினார். அப்போது சாலையின் இருபக்கம் பாஜக தொண்டர்கள் மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற பிரதமர் மோடியின் வாகன பேரணியில் தேர்தல் நடத்தை விதி மீறல் நடந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் ரோடு ஷோவில் விதிகளை மீறி விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் மாம்பலம், பாண்டிபஜார் ஆகிய காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரோடு ஷோவில் பட்டாசு வெடிக்க கூடாது, பதாகைகள் வைக்க கூடாது உள்ளிட்ட 20 நிபந்தனைகளை காவல்துறை விதித்திருந்தது

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்