#BREAKING: தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா? – மருத்துவத்துறை செயலர் விளக்கம்!

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்பது குறித்து மருத்துவத்துறை செயலர் விளக்கம்.

தமிழகத்தில் கொரோனா பரவல் தொற்று குறைந்ததை தொடர்ந்து ஊரடங்கில் விலக்கு அளிக்கப்பட்டு, கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இதனால் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து துறைகளும் மீண்டும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த சமயத்தில், நாட்டில் மீண்டும் கொரோனா பாவல் சற்று தலைதூக்க ஆரம்பித்து உள்ளது. டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று சற்று அதிகரித்து வரும் நிலையில், முகக்கவசம் உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாடுகளை பிறப்பற்ற அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில் தமிழகத்திலும் மீண்டும் கொரோனா பரவல் அச்சம் நிலவி வருகிறது. குறைந்திருந்த பாதிப்பு எண்ணிக்கை சற்று வயர்ந்து வருவதாக கூறப்படுகிறது, இருப்பினும் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் தான் உள்ளது. மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்றும் முகக்கவசம் அணிவது கட்டாயம் எனவும் மருத்துவத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த சமயத்தில் தான் சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், மீண்டும் மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது.

இதனால் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா அல்லது கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என்ற கருத்து மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. சமூக ஊடகங்களில் ஊரடங்கு தொடர்பான கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை ஐஐடியில் மேலும் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால்,பாதிப்பு எண்ணிக்கை 111-ஆக அதிகரித்துள்ளது என தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய அவர், தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்பது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும்  தேவையற்ற வதந்திகளோ, அச்சுறுத்தலோ ஏற்படுத்த வேண்டிய நேரமில்லை எனவும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 1000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்தால் 3 பேருக்கு தொற்று உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் யாரும் பதற்றப்பட தேவையில்லை என விளக்கமளித்தார். மேலும், கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்