ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை 3 மாதங்களில் தாக்கல் செய்ய ஆணையத்திற்கு ஏன் உத்தரவிட கூடாது?
முதல்வராக இருந்த ஜெயலலிதா அவர்கள் கடந்த 2016-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் காலமானார். நீண்ட நாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் மரணமடைந்தாலும், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கருதிய தமிழக அரசு, அது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில், குழு அமைத்தது.
இந்நிலையில், தொண்டன் சுப்பிரமணி என்ற வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கை தொடர்ந்துள்ளார். அதில், 2017-ம் ஆண்டு விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இதுவரை அந்த ஆணையம் ஒரு இடைக்கால அறிக்கையும் தாக்கல் செய்யவில்லை. இறுதி அறிக்கையும் தாக்கல் செய்யவில்லை. எனவே இந்த விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும், அறிக்கையை பெற தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கையை முன்வைத்திருந்தார்.
அந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை 3 மாதங்களில் தாக்கல் செய்ய ஆணையத்திற்கு ஏன் உத்தரவிட கூடாது? என கேள்வி எழுப்பியுள்ள நிலையில், இது தொடர்பாக 6 மாதங்களில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.