ஜெய் ஹிந்த் முழக்கம்: மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும் – கடம்பூர் ராஜு!

ஜெய் ஹிந்த் முழக்கம்: மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும் – கடம்பூர் ராஜு!

ஜெய் ஹிந்த் முழக்கம் குறித்து சட்டப்பேரவை உறுப்பினர் ஈஸ்ரன் பேசியது குறித்து மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் கொரோனா முதல் அலை ஏற்பட்ட பொழுது அதிமுக அரசு அதை வெற்றிகரமாக சமாளித்தது என்பது நாட்டு மக்களுக்கு தெரியும் எனவும், கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே அப்போதைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி தமிழக மக்கள் அனைவருக்கும் இலவச தடுப்பூசி போடப்படும் என அறிவித்து இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த வாரம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் அவர்கள் பேசினார். அப்போது பேசிய அவர், கடந்த ஆண்டு ஆளுநர் உரையின் முடிவில் நன்றி வணக்கம், ஜெய் ஹிந்த் என தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால் தற்பொழுது ஆளுநர் உரையின் முடிவில் நன்றி வணக்கம் மட்டுமே உள்ளதாகவும் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை இல்லை, எனவே தமிழகம் தலை நிமிர தொடங்கி விட்டது என்றும் தெரிவித்திருந்தார். இவரது இந்த கருத்துக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சட்டப்பேரவை உறுப்பினர் ஈஸ்வரன் ஜெய்ஹிந்த் முழக்கம் குறித்து தவறான கருத்து கூறியதாக பேசிய கடம்பூர் ராஜு, ஜெய்ஹிந்த் என்பது நம் தேச விடுதலைக்காக போராடிய செண்பகராமன் பிள்ளை என்பவர் முதன் முதலாக உருவாக்கியதாகவும், அவருக்கு சிலை அமைக்கப்பட்டு ஆண்டுதோறும் அவரது பிறந்த நாள் தியாகிகள் தினமாக கடை பெற்று வருவதாகவும், இதற்காக நாடே பெருமைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் எழுப்பிய ஜெய்ஹிந்த் முழக்கத்துக்கு என்றும் உயிரோட்டம் உள்ளது. ஆனால் சட்டப்பேரவை உறுப்பினர் ஈஸ்வரன் ஜெய் ஹிந்த் முழக்கம் குறித்து தவறாக பேசியதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் எனவும் கூறிய அவர், இருப்பினும் இது குறித்து மத்திய அரசு தான் முடிவு எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

author avatar
Rebekal
Join our channel google news Youtube