#Breaking:வேதா இல்லம் – மேல்முறையீட்டுக்கு அனுமதி கோரி அதிமுக மனு!

சென்னை:வேதா இல்லத்தை அரசுடைமை ஆக்கப்பட்டதை ரத்து செய்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டுக்கு அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் எனும் வீட்டில் வசித்து வந்தார். இந்த இல்லத்தை நினைவிடமாக மாற்ற உள்ளதாக 2017 ஆம் ஆண்டு அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்திருந்தார். அந்த இடத்தை தமிழக அரசு கையகப்படுத்தி, அரசுடைமை ஆக்குவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.

ஆனால்,இதனை எதிர்த்து போயஸ் கார்டனில் குடியிருப்போர் மற்றும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் மகன் தீபக் ஆகியோர் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து,இந்த வழக்கில் கடந்த நவ.24 ஆம் தேதி தீர்ப்பு  வெளியாகியது.அதன்படி, வேதா நிலையத்தை அரசுடைமையாக்கிய சட்டம் செல்லாது எனவும், மூன்று வாரத்தில் வேதா நிலையம் தீபா மற்றும் தீபக்கிடம் ஒப்படைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்பின்னர்,போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலைய நினைவு இல்லத்தின் சாவியை தங்களிடம் ஒப்படைக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் தீபா,தீபக் மனு அளித்தனர்.இதற்கு பதில் அளித்த சென்னை மாவட்ட ஆட்சியர்,அரசு தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசித்துவிட்டு,இது தொடர்பாக முடிவெடுப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில்,வேதா இல்லத்தை அரசுடைமை ஆக்கப்பட்டதை ரத்து செய்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டுக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.ஜெயலலிதா நினைவு இல்ல அறக்கட்டளை உறுப்பினரும்,அதிமுக வழிகாட்டுதல் குழு உறுப்பினருமான சி.வி.சண்முகம் அவர்கள் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில்,வேதா இல்லத்தை அரசுடைமை ஆக்கப்பட்டதை ரத்து செய்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மாநில அரசு அக்கறை காட்டாததால்,அறக்கட்டளை உறுப்பினர் என்ற முறையில் மேல்முறையீடு செய்வதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.அதே சமயம் நினைவுஇல்லத்தை வேதா இல்லத்தை அரசுடைமை ஆக்குவது அரசு மற்றும் மக்கள் பணத்தை வீணடிக்கும் செயல் என்ற தனி நீதிபதியின் கருத்து அதிமுக தொண்டர்களின் மனதை புண்படுத்தியுள்ளது.நீதிமன்ற உத்தரவுப்படி வேதா இல்ல சாவியை வாரிசுகளிடம் ஒப்படைத்து விட்டால் அதிமுக பெரும் இழப்பு ஏற்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு மீதான விசாரணை வரும் வெள்ளிக்கிழமை அல்லது அடுத்த வாரம் திங்கட்கிழமை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.